லிபியாவின் பென்காஸி
நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்,
அமெரிக்க தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீபன்ஸ் உள்பட நான்கு அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ள
சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு காரணம்
என்ன தெரியுமா? கருத்து சுதந்திரம் என்ற போர்வையில், இஸ்லாமிய மதத்தை
இழிவுபடுத்தும் வகையில் சுமார் 14
நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படம் ஒன்று “யூ-டியூப்”பில் வெளியானதுதான்...
பொதுவாகவே, ஒரு
மதத்தைச் சேர்ந்தவர்கள் மாற்று மதம் குறித்து விமர்சிப்பது என்பது அநாகரீகமான
ஒன்று. அதிலும், மிகவும் மட்டரகமான எண்ணத்துடன், கேவலமான ரசனையுடன்
எடுக்கப்பட்டுள்ள இந்த குறும்படத்தினால் ஆத்திரம் அடைந்த இஸ்லாமிய தீவிரவாதிகள்,
அரபு நாடுகளில் ஆங்காங்கே அமெரிக்கத் தூதரகம் மேல் தாக்குதல் நடத்தினர். ஏனெனில்,
இந்தப் படத்தை வெளியிட்டுள்ளது அமெரிக்காவில் வசிக்கும் பசில் என்பவர் என்று
கூறப்படுகிறது.
இணையதளம் என்பது
தொழில்நுட்பம் நமக்கு தந்திருக்கும் ஒரு அற்புதமான வரப்பிரசாதம்...! ஆனால்,
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல், இணையதள உலகில் சமூக வலைதளங்கள்
மற்றும் அதனோடு தொடர்புடைய பிற தளங்களின் செயல்பாடுகள் மெல்ல மெல்ல விபரீதப்
பாதைக்கு சென்று கொண்டிருக்கின்றன என்பதை உணருபவர்கள் வெகுச் சிலரே. எந்தவிதமான
படைப்புகளையும், யார் வேண்டுமானாலும் யூ-டியூப்பில் வெளியிட முடியும் என்பது
உண்மையான, தகுதியான படைப்பாளிகளுக்கு அருமையான வாய்ப்பு என்பதில் ஐயமே இல்லை.
ஆனால், விபரித புத்திக்காரர்களுக்கு....??? அவர்களுக்கு இது அருமையான
வாய்ப்புதான்... தங்களின் அனைத்து விதமான அலங்கோலங்களையும் தங்கு தடையின்றி
அரங்கேற்ற அருமையான தளமாக இதைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.
விளைவு...? நடைபெற்ற
எந்த சம்பவத்துக்கும் சம்பந்தம் இல்லாத நான்கு அப்பாவிகளின் உயிர்கள் அநியாயமாக
பறிக்கப்பட்டுள்ளது. ஒரு மதத்தைச் சேர்ந்த தீவிரவாதிகளை தூண்டி விட வேண்டும் என்று
விரும்பிய விஷமிகளுக்கு, தங்களது எண்ணம் ஈடேற இவ்வளவு எளிதான வழிமுறைகள்
இருப்பதைக் கண்டு உலகம் முழுக்க உள்ள விஷமிகள் ஆனந்தக் கூத்தாடுவார்கள் என்பது
மட்டும் திண்ணம்...
உலகம் முழுக்க உள்ள
படைப்பாளிகள் எளிதாக தங்கள் படைப்பை வெளியிட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த யூ-டியூப்
நிர்வாகம், நல்ல படைப்புகள் என்று கூட பார்க்க வேண்டாம், குறைந்தபட்சம் இதுபோன்ற
விபரீத விஷயங்களை அரங்கேற்றும் தளமாக தங்களது அமைப்பு மாறி விடாமல் தடுக்க
முயற்சிக்க வேண்டாமா? அருவருக்கத்தக்க, ஆபாசமிக்க ஏராளமான குப்பைகளும் இதில் இருந்தபோதிலும்,
அவையெல்லாம் தனி மனிதன் மனநிலை மற்றும் குணநலன்களை மட்டுமே பாதிக்கக் கூடியவை;
ஆனால், தற்போது அரங்கேறி இருக்கும் விபரீதமான விஷயங்கள், இரு சமுதாயங்கள் இடையே,
இரு நாடுகள் இடையே தீராத வன்மத்தை ஏற்படுத்தி விடக்கூடியவை என்பதால், இவை
அரங்கேறாமல் தடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பு யூ-டியூப் நிர்வாகத்துக்கு
உள்ளதல்லவா?
யூ-டியூப்”பில்
அரங்கேறும் அனைத்தையும் தங்களால் கண்காணிக்க முடியாது என்று சொத்தை வாதத்தை அந்த
நிர்வாகம் முன்வைக்கும் என்றால், இதுபோன்ற ஒரு வசதியையே அவர்கள் ஏற்படுத்தி
தந்திருக்கக் கூடாது என்பதுதான் அதற்கு பதிலாக இருக்கும். குடியிருப்பு பகுதியில்
கொடிய காட்டு மிருகங்களை வளர்த்து விட்டு, அது யாரையாவது தாக்கினால், அதற்கு
தாங்கள் பொறுப்பல்ல என்று யாராவது கூறினால், இந்த சமுதாயம் பார்த்துக் கொண்டு சும்மா
இருக்குமா?
என்றோ நடந்து முடிந்த
இரண்டாம் உலகப்போர் ஏற்படுத்திய இழப்புகளுக்கு இன்றைக்கும் பல நாடுகளும் பல்வேறு
சமூகங்களும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பதையும் நாம்
மறந்துவிடக் கூடாது.
சமூக வலைதளங்கள்
மூலமாக ஏற்கனவே தனிப்பட்ட வாழ்க்கைகள் சத்தமின்றி சின்னாபின்னமாகத் தொடங்கியுள்ள
நிலையில், ஒட்டுமொத்த சமுதாயத்தை குறிவைத்து செய்யப்படும் விஷமங்களுக்கும் அந்த
தளங்கள் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமா? கருத்து சுதந்திரம் என்ற
பெயரில், காட்டுமிரான்டித்தனங்கள் அரங்கேறுவது தான் நவ நாகரீகமா? என்பதை சுய
பரிசோதனை செய்துகொள்ளும் தருணம் வந்து விட்டது. ஆரம்பத்திலேயே சிந்திக்கவில்லை
எனில், இழப்பு மிகப்பெரிதாக இருக்கப் போவது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை...!
No comments:
Post a Comment