விதுர நீதி!

புராண காலம் தொடங்கி, இன்றைய நவீன காலம் வரை எவ்வளவோ அமைச்சர்கள் தங்கள் மதிநுட்பத்தை பல்வேறு விதமாக, பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால், திருதராஷ்டிரன் அமைச்சரவையை அலங்கரித்த விதுரன் போன்ற மதிநுட்பமும், நேர்மையும், யாருக்கும் அஞ்சாமல் நல்லவற்றை எடுத்துரைத்தல் போன்றவற்றில் விதுரனுக்கு இணையாக சொல்லக்கூடியவர்கள் வெகு சிலரே! காலத்தை வென்று நிற்கும் விதுரநீதி, இன்றைய அரசியல்வாதிகளுக்கு மிகவும் பொருந்தக்கூடியது! விதுரநீதியில் லட்சத்தில் ஒரு பங்கு நமக்கு கைகூடினாலும் அது நாம் செய்யும் பாக்கியமே!


Wednesday, April 28, 2010

அந்தஸ்து தீண்டாமை

மே ஒன்று- தொழிலாளர் தினம்! ஆதிக்கவெறி அடக்கி, அன்புநெறி செலுத்தி, உதிரத்தை வியர்வையாக்கி உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை பெற்ற நாளாக கொண்டாடப்படும் நாள்! 1886-ம் ஆண்டு இதே நாளில்தான் எட்டு மணி நேர வேலையை வலியுறுத்தி சிகாகோ நகரில் நடந்த போராட்டத்தில், தங்களது இன்னுயிரையும் ரத்தத்தையும் தொழிலாளர்கள் தியாகம் செய்த நாள்! தொழிலாளர்கள் என்றாலே, அதிகாலை முதல் அந்தி சாயும் வரை அடிமை போல உழைக்க வேண்டும் என்ற எழுதப்படாத சாசனத்தை மாற்றக் காரணமாக இருந்த நாள்!

கியூபாவில் சுமார் அறுபது ஆண்டு காலமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடு வரும் பிடல் காஸ்ட்ரோ, மே தினம் அன்று நடத்தும் பிரம்மாண்டமான ஊர்வலமும், அவரது பேச்சும் உலகம் முழுக்க உள்ள தொழிலார் வர்க்கத்தின் ரத்த நாளங்களை முறுக்கேற்றி வந்திருக்கின்றன.

ஆனால், உலக முன்னேற்றத்தின் சிற்பிகளாக விளங்கிக் கொண்டிருக்கும் உழைப்பாளிகளின் உன்னதத்தை போற்றிக் கொண்டாட வேண்டிய மே தினம் இன்று எப்படி அனுசரிக்கப்படுகிறது? உலக அளவில் எப்படியோ, ஆனால் இந்தியாவைப் பொருத்தவரையில் இந்த நாள் மற்றுமொரு விடுமுறை நாளாகவும், “உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக” படம் பார்க்கும் நாளாகவும்தான் பார்க்கப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

ஏன் இந்த நிலை? நமது நாட்டில் எழுபது சதவீதமாக இருக்கும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், அதிகார வர்க்கத்தையும் அதை அண்டி வாழும் கூட்டத்தை மட்டுமே சமூகமாக பார்க்கும் மனநிலைக்கு ஏன் மாறினோம்?

சமூகத்தில் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், அனைத்து மட்டத்திலும் அன்றாடம் உழைத்துக் கொண்டிருக்கும் மக்களின் பங்களிப்பு இல்லாமல் எந்த இயக்கமும் நடைபெறாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. துப்புரவு தொழிலாளி தொடங்கி, அரசுத் துறையாகட்டும், அமைப்பு சாரா தொழிலாளிகளாகட்டும், ஏதோ ஒருவகையில் நம்முடைய அன்றாட வாழ்க்கை நிம்மதியாக நடைபெற நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனாலும், கம்ப்யூட்டர் சாப்ட்வேர், தொலைத்தொடர்புத்துறை மற்றும் சில துறைகளில் கடந்த 15 ஆண்டுகளாக இந்தியா எட்டிய அதீத வளர்ச்சியும், அதைத் தொடர்ந்து கிட்டிய வேலைவாய்ப்புகளும்- வசதிகளும், நமது எண்ணங்களிலும், மற்ற மனிதர்கள் குறித்த நமது மதிப்பீடுகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டன. ஜாதி குறித்த தீண்டாமை விலகி, அந்தஸ்து தீண்டாமை நம்மை முழுவதுமாக ஆக்ரமித்து விட்டது.

நுனி நாக்கு ஆங்கிலமும், கும்மிருட்டில் கையில் மதுக்கிண்ணங்களும், அருகில் சுழன்றாடும் இளம்பெண்களும் தான் வாழ்க்கை; அந்த வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்கள் மட்டுமே மனிதர்கள்; மற்ற அனைவரும் நாகரீகம் தெரியாதவர்கள்... குறிப்பாக, உழைக்கும் வர்க்கமும்- விவசாயிகளும் தீண்டத்தகாதவர்கள் என்ற எண்ணம் வளர்ந்து கொண்டே போகிறது.

அதன் விளைவுதான் மே தினமாகட்டும், மற்ற எந்த முக்கிய நாட்களாகட்டும், நம்மைப் பொருத்தவரையில் வெறும் விடுமுறை நாட்களாகி விட்டன. ஒரு நாட்டின் இதயம் போன்றவர்கள் விவசாயிகளும், தொழிலாளர்களும் தான்! இதயத்தை ஒதுக்கி வைத்து விட்டு எந்த இயக்கமும் இருக்க முடியாது.

இந்த மே தினத்திலாவது, உழைப்பின் மேன்மையை ஒருகணமேனும் போற்றிவிட்டு, அந்தஸ்து தீண்டாமை நம்மை விட்டு விலக முயற்சி செய்ய சூளுரைத்து, மேதின மேன்மையை உலகோர் உணரச் செய்ய உறுதி கொள்வோமா?

Monday, April 19, 2010

என்று தணியும் இந்த கொள்ளை மோகம்?

ஏறத்தாழ 2400 ஆண்டுகளுக்கு முன்னர், தன்னுடைய மகனோடு அரண்மனையின் மிக உயர்ந்த பகுதியில் நின்று கொண்டு, கண்களில் அளப்பறியா ஆர்வம் கொப்பளிக்க பேசிக்கொண்டு இருந்தார். “மகனே, அதோ கிழக்கே வெகு தொலைவில் எனது கனவு தேசமான இந்தியா உள்ளது! வற்றாத ஜீவநதிகளும், கற்பனையிலும் எண்ணமுடியாத இயற்கை வளங்களும், வைர- வைடூரிய- ரத்தின குவியல்களும் குவிந்துள்ள நாடு அது! எல்லாவற்றிற்கும் மேலாக, ஹோமரின் அற்புத படைப்புகளான லியத், ஒடிஸ்ஸி ஆகியவற்றை விஞ்சும் வகையில் ராமாயணம், மகாபாரதம் போன்ற எண்ணற்ற காவியங்களும், தத்துவக் குவியல்களும் நிறைந்துள்ள நாடு இந்தியா. அந்த நாட்டை வென்று உனது ஆட்சியின் கீழ் கொண்டு வருவதைத்தான் உன் வாழ்க்கையின் லட்சியமாகக் கொள்ளவேண்டும்” என உணர்ச்சி பொங்க உரைத்த அந்த மன்னன் பிலிப்; ஆர்வத்துடனும் உன்னிப்பாகவும் கவனித்துக் கொண்டிருந்த மகன்தான் உலகையே தனது கோடிக்கு கீழே கொண்டு வரத் துடித்த மாவீரன் அலெக்சாண்டர்!

2400 ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவின் அளவற்ற வளங்கள் உலகத்தின் கண்களை வெகுவாக உறுத்தியது என்றால், பணத்தின் மீது வெறி கொண்டு அலையும் நவீன காலத்து மனிதர்களைப் பற்றி சொல்லவேத் தேவையில்லை.

கர்நாடகத்தின் வடக்குப் பகுதியில்- ஆந்திர எல்லையில் இந்தியாவின் கனிம வளத்திற்கு சான்றாக விளங்குவதுதான் பெல்லாரி மற்றும் சுற்றுப்பகுதிகள். தங்கள் காலடிக்கு கீழே குவிந்து கிடக்கும் செல்வம் பற்றி அறியாது, வறுமையில் உழன்று கொண்டிருந்தனர், அந்தப் பகுதி மக்கள். விடுவார்களா அரசியல்வாதிகள்?

தற்போது கர்நாடக அரசியலையே தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் அந்த மந்திரி சகோதரர்கள், சுரங்கம் தோண்டும் உரிமையைப் பெற்று, இயற்கை வளம் முழுவதையும் எந்தவித கட்டுப்பாடும் இன்றி சூறையாடிக் கொண்டிருக்கின்றனர். தடுக்க வேண்டிய அரசாங்கத்தின் அனைத்துப் பிரிவினரின் கைகளையும் கரன்சி கத்தைகளால் கட்டிப்போட்டுள்ளனர், சகோதரர்கள்!

அவர்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் குறைந்தபட்சம் 100 கோடி டன் இரும்புத்தாது இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு டன் இரும்புத்தாது ஏற்றுமதி செய்தால் கிடைக்கும் வருமானம் 7,000 ரூபாய். அதை வெட்டி எடுக்க ஆகும் செலவு வெறும் 350 ரூபாய். ஆக, ஒரு டன்னுக்கு மட்டும் கிடைக்கும் லாபம் சுமார் 6600 ரூபாய்.

இதில் அரசாங்கத்துக்கு கொடுக்கப்படும் தொகை எவ்வளவு தெரியுமா? மயங்கி விடாதீர்கள்... வெறும் 27 ரூபாய்! இதுவரை சுரண்டி எடுக்கப்பட்டது மட்டும் 30 கோடி டன் இரும்புத்தாது! அப்படியானால், அந்த சகோதரர்கள் இதுவரை சூறையாடிய இயற்கை வளங்களின் மதிப்பை கணக்குப் போட்டு பார்க்க கால்குலேட்டரில் இருக்கும் பூஜ்யங்கள் போதாது!

அரசாங்க விதிகளை மீறுவது- காடுகளை சகட்டுமேனிக்கு அழிப்பது மட்டுமல்லாமல், இரு மாநில எல்லைகளையே தங்கள் இஷ்டத்திற்கு இவர்கள் மாற்றி அமைத்துள்ளதும் தெரியவந்துள்ளது! இவ்வளவுக்கும் இரண்டு மாநிலங்களை ஆள்வதும் எதிரெதிர் தேசியக் கட்சிகள்!

பணம் என்றால் பிணம் கூட வாயைத் திறக்கும் என்பார்கள்! இந்த அரசியல்வாதிகள் எம்மாத்திரம்? மாவீரன் அலெக்ஸாண்டரின் தந்தையாவது இந்தியாவின் வளத்தை தங்களது நாட்டு மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்றுதான் எண்ணினான்... ஆனால் நம்மவர்களோ, இவ்வளவு பணத்தைக் கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்று கூடத் தெரியாமல், பணவெறிக்கு இரையாகிக் கிடக்கிறார்களே?

மாவோயிஸ்ட்களின் பிரச்சினைக்கு மூல காரணமாக சொல்லப்படுவதே, பழங்குடியினர் பகுதிகளில் இயற்கை வளங்கள் கொள்ளை அடிக்கப்படுவதுதான்! அதிலும், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நக்சலைட்டுகள் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் நமது நாட்டில் இன்னமும் இதுபோன்ற இயற்கைவளக் கொள்ளையை அனுமதிக்கலாமா?

கவனிக்குமா, மத்திய அரசு?

Saturday, April 17, 2010

கட்டாயக்கல்வி – சாத்தியமா?

வணக்கம்! போலி சாமியார்- போலி மருந்துகள்- திருமணத்துக்கு முன்பே உறவு என கடந்த சில வார செய்திகளில் ஆக்கிரமித்து இருந்த விஷயங்கள் எதுவுமே ஆரோக்கியமானதாக இல்லை என்றாலும், மத்திய அரசின் “புதிய கல்வி கொள்கை” நம்பிக்கை ரேகையை பரவ விட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட “கல்வி கற்பது அடிப்படை உரிமை” திட்டம் ஏறக்குறைய 130 நாடுகளில்- நம்மை விட பல வகையில் பின்தங்கிய நாடுகளில் கூட- செயல்படுத்தப்பட்டு வருகிறது. நமது நாட்டிலும், “கல்வி அடிப்படை உரிமை” என சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவச கல்வி சட்டமாக்கபட்டுள்ளது.

எந்த காலக்கட்டத்திலும், மனித சமூகத்தின் ஆதாரமாக திகழ்வது கல்வி அறிவுதான். இதை முழுமையாக உணர்ந்திருந்த “படிக்காத மேதை” காமராஜர், எல்லா குழந்தைகளுக்கும் கல்விக்கண் திறப்பதையே தன் வாழ்வின் மிகப்பெரிய லட்சியமாகக் கொண்டிருந்தார். ஆரம்பக்கல்வி படிக்கும் குழந்தைகளால் எவ்வளவு தொலைவு நடக்க முடியுமோ, அதை கருத்தில் கொண்டு ஆரம்பப்பள்ளிகளையும், உயர்நிலைப் பள்ளி மாணவர்களால் பயணிக்க இயலும் தூரத்தை கணக்கில் கொண்டு உயர்நிலைப் பள்ளிகளையும் துவக்க உத்தரவிட்டவர், கர்ம வீரர்! அது மட்டுமல்ல, வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் குழந்தைகளுக்கு மத்திய உணவு அளிப்பதன் மூலம், அவர்களை பள்ளிக்கு வரவழைத்த தீர்க்கதரிசி அவர்!

படிப்பறிவு இல்லாத அந்த மேதைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய சிந்தனை இப்போதாவது நமக்கு வயப்பட்டதே! ஆனாலும், 50 ஆண்டுகளுக்கு முன்பு நமது அரசாங்கமும் அதிகாரிகளும் கொண்டிருந்த நேர்மையும் செயல்திறனும், எந்த ஒரு திட்டத்தையும் சிறப்பாக செயல்படுத்த அடிப்படை காரணமாக அமைந்திருந்தது. இன்று அதை எதிர்பார்க்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான்!

இந்தியாவில் ஆறு முதல் பதினான்கு வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 22 கோடி என்றும், அதில் சுமார் 92 லட்சம் பேர் அடிப்படை கல்வியறிவு அற்றவர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இவர்கள் பள்ளிக்கு செல்லாததன் மிகப் பெரிய காரணமே, வறுமை தான்! இளம் வயதிலேயே ஹோட்டல்கள், மெக்கானிக் கடைகள் போன்றவற்றில் வேலை செய்து, தங்களால் இயன்ற அளவுக்கு, குடும்ப வறுமையை போக்குவதில் பங்காற்றுகிறார்கள். இளமையில் வறுமை மிகப் பெரிய கொடுமை என்பதும், நமது நாட்டில் சுமார் 30 சதவீதம் பேர் அதை அனுபவிப்பவர்கள் என்பதும் நாம் அறிந்ததே!

இவர்களின் கல்வியும்- குடும்பத்தின் ஏழ்மை சூழ்நிலையும் ஒன்றோடு ஒன்று பிண்ணி பிணைந்தவை. இதை ஒட்டுமொத்த சமூக பிரச்சினையாக அணுகினால் மட்டுமே, இந்தத் திட்டத்தின் உயரிய நோக்கம் நிறைவேறும் பாதையில் நம்மால் பயணிக்க முடியும். முதல் அடி எடுத்து வைப்பதன் மூலமே எந்த நீண்ட பயணத்தையும் தொடங்க முடியும் என்ற வகையில், அடிப்படை கல்வி உரிமை சட்டத்தை வரவேற்று, நம்மால் இயன்ற பங்களிப்பை செய்வோம்!

இலக்கிய போர்வையில் ஆபாசம்!

சமீபத்தில் பெண் எழுத்தாளர் ஒருவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது... "இணையதளத்தில் வெளியாகும் அவரது எழுத்துக்களில் ஆபாசம் மேலோங்கி இருக்கிறது" என்பதுதான் அந்த புகார்...!

வழக்கம் போலவே எழுத்தாளருக்கு ஆதரவான- எதிர்ப்பான கருத்துக்கள் பல்வேறு தரப்பிலும் கிளம்பி விட்டன. "எழுத்துக்கும் பேச்சுக்கும் தடை போட இது ஒன்றும் பழமைவாதிகளால் ஆளப்படும் நாடு அல்ல" என்று ஒரு சாராரும், "சுய ஆதாயத்துக்காக ஆபாசமாக எழுதப்படுவது கண்டிக்கப்பட வேண்டும்" என்று மறு சாராரும் வாதிடுகின்றனர்.

எந்த ஒரு கருத்துக்கும் இரு வகை பார்வை இருக்கத்தான் செய்யும். அவரவர் பார்வையில் அவரவர் கருத்துக்கள் நியாயமானவையே! என் மனத்திலும் இது குறித்து எழுந்த தர்க்கங்களை உங்கள் முன் சமர்ப்பிகின்றேன்...!

எந்த ஒரு நாகரீகமான சமுதாயத்திலும் குறிப்பிட்ட சில மனிதர்களுக்கு விசேஷமான மரியாதைகளும், அவர்களது கருத்துக்களுக்கு முன்னுரிமையும் கிடைப்பது இயல்புதான்! அரசியல்வாதிகளுக்கு அவர்களது அதிகாரத்தின் மூலமாகவும், நடிகர்களுக்கு கவர்ச்சியினாலும், ஆன்மிகவாதிகளுக்கு- அவர்களது ஞானத்தின் காரணமாகவும், பெரிய மனிதர்களுக்கு பணத்தினாலும் இந்த முக்கியத்துவங்கள் கிடைக்கின்றன.

இவர்களை தவிர, சமுதாயத்தினால் எப்போதுமே ஊன்றி கவனிக்கப்படுபவர்கள் இலக்கியவாதிகள்! இவர்களது படிப்பறிவும்- வித்தியாசமான சிந்தனைகளும், மொழியின் மீதான காதலும் இவர்களுக்கு எப்போதுமே ஒரு சிறப்பான இடத்தை சமூகத்தில் பெற்று தருவதுடன், இவர்களது சிந்தனைகளும் கருத்துக்களும் சமுதாயத்தில் பெரிய தாக்கத்தை உண்டாக்கக் கூடியவை என்பதை யாரும் மறுக்க முடியாது! இதனாலேயே பொறுப்புணர்வும் இவர்களுக்கு சற்று கூடுதலாக இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்ப்பது தவறா?

"சினிமாவில் காட்டாத ஆபாசத்தையா நாங்கள் எழுதி விட்டோம்?" என்று ஒரு தவறை இன்னொரு தவறுக்கு உதாரணப்படுத்துவது என்பது முரணாகத் தெரியவில்லையா? "ஆபாசத்தின் எல்லை எது என்பதை எப்படி வரையறுக்கிறீர்கள்?" என்று புத்திசாலிதனமாக கேட்பதன் மூலம், தங்களது பொறுப்பில் இருந்து நைசாக நழுவும் முயற்சிதானே இது!

குறிப்பிட்ட சில கருத்துக்களை வலியுறுத்த பயன்படும் முயற்சியில் உபயோகிக்கப்படும் வார்த்தைகள் நிச்சயமாக தவறாக எடுத்துக் கொள்ளப்படாது தான்! கமலின் மகாநதியில் உபயோகிக்கப்படும் "விலைமகள் மகன்" வார்த்தையும் இந்த வகையானது தான்! இந்த அளவுகோலை எல்லா இடங்களிலும் பயன்படுத்த முடியுமா? ஏன், இவர்களது வீட்டில் பயன்படுத்துவார்களா?

"100 ஆசை நாயகர்களை வைத்துக் கொள்வேன்" என்பதும், "இருபாலுமை என்பது எனது பிறப்புரிமை" என வறட்டு வாதம் புரிவதும், சமூகம் உருப்பட எந்த வகையில் உதவும் என்பதும் நமது சிற்றறிவுக்கு புரியவில்லை. இவர்களின் ஆபாச எழுத்துக்கு எதிர்ப்பு கிளம்பும்போது எல்லாம் "பெண்ணிய படைப்பாளிகளை முடக்கும் முயற்சி" என்ற உளுத்துப் போன வாதத்தின் அடியில் ஒளிந்து கொள்ள முயல்வது ஏன்?

அடிமனது வக்கிரங்களும், காம உணர்ச்சியும் மனித குலத்தின் பலவீனம்தான்! அதை மட்டரகமான முறையில் பயன்படுத்தி பொருள் லாபம் ஈட்ட முனைவோர் மிருகத்திற்கு சமமானவர்கள் அன்றோ! இலக்கியவாதிகள் என்பவர்கள்- சமுதாயத்தின் பலவீனங்களை களைந்து, மென்மேலும் முன்னேற ராஜபாட்டை அமைக்க வேண்டியவர்கள் அல்லவா?

எப்பேர்பட்ட வேதனைகளையும்- வலிகளையும், காதலையும்- காமத்தையும், வீரத்தையும்- விவேகத்தையும் அழகாக சொல்ல அன்னை தமிழில் வார்த்தைகள் இல்லையா? இல்லை, இவர்களது வார்த்தை வளம்தான் குன்றி விட்டதா? எழுத்து சுதந்திரம் என்பது என்ன? எதை வேண்டுமானாலும் எழுதுவதா? அல்லது முற்போக்கு சிந்தனைகளை- யாருக்கும் அஞ்சாமல் வலிமையான வார்த்தைகள் மூலம் விதைப்பதா?

எதையுமே தவறில்லை என்று வாதிட்டு- மற்றவர்களை மட்டுமின்றி, தங்களை தாங்களே ஏமாற்றி கொள்பவர்களாகத்தான் இவர்கள் தென்படுகிறார்களே தவிர, உண்மையான இலக்கியவாதிகளாக அல்ல!

இப்படி வருடத்திற்கு ஒருமுறை ஏதாவது ஒரு சர்ச்சையில், இவர்கள் வலுவில் சென்று சிக்கிக் கொள்வதன் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? மலிவான விளம்பர உத்திகளை நம்பி மட்டுமே பொருளையும் புகழையும் அடைந்து விடலாம் என்ற தவறான எண்ணத்தை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?