மே ஒன்று- தொழிலாளர் தினம்! ஆதிக்கவெறி அடக்கி, அன்புநெறி செலுத்தி, உதிரத்தை வியர்வையாக்கி உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை பெற்ற நாளாக கொண்டாடப்படும் நாள்! 1886-ம் ஆண்டு இதே நாளில்தான் எட்டு மணி நேர வேலையை வலியுறுத்தி சிகாகோ நகரில் நடந்த போராட்டத்தில், தங்களது இன்னுயிரையும் ரத்தத்தையும் தொழிலாளர்கள் தியாகம் செய்த நாள்! தொழிலாளர்கள் என்றாலே, அதிகாலை முதல் அந்தி சாயும் வரை அடிமை போல உழைக்க வேண்டும் என்ற எழுதப்படாத சாசனத்தை மாற்றக் காரணமாக இருந்த நாள்!
கியூபாவில் சுமார் அறுபது ஆண்டு காலமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடு வரும் பிடல் காஸ்ட்ரோ, மே தினம் அன்று நடத்தும் பிரம்மாண்டமான ஊர்வலமும், அவரது பேச்சும் உலகம் முழுக்க உள்ள தொழிலார் வர்க்கத்தின் ரத்த நாளங்களை முறுக்கேற்றி வந்திருக்கின்றன.
ஆனால், உலக முன்னேற்றத்தின் சிற்பிகளாக விளங்கிக் கொண்டிருக்கும் உழைப்பாளிகளின் உன்னதத்தை போற்றிக் கொண்டாட வேண்டிய மே தினம் இன்று எப்படி அனுசரிக்கப்படுகிறது? உலக அளவில் எப்படியோ, ஆனால் இந்தியாவைப் பொருத்தவரையில் இந்த நாள் மற்றுமொரு விடுமுறை நாளாகவும், “உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக” படம் பார்க்கும் நாளாகவும்தான் பார்க்கப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
ஏன் இந்த நிலை? நமது நாட்டில் எழுபது சதவீதமாக இருக்கும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், அதிகார வர்க்கத்தையும் அதை அண்டி வாழும் கூட்டத்தை மட்டுமே சமூகமாக பார்க்கும் மனநிலைக்கு ஏன் மாறினோம்?
சமூகத்தில் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், அனைத்து மட்டத்திலும் அன்றாடம் உழைத்துக் கொண்டிருக்கும் மக்களின் பங்களிப்பு இல்லாமல் எந்த இயக்கமும் நடைபெறாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. துப்புரவு தொழிலாளி தொடங்கி, அரசுத் துறையாகட்டும், அமைப்பு சாரா தொழிலாளிகளாகட்டும், ஏதோ ஒருவகையில் நம்முடைய அன்றாட வாழ்க்கை நிம்மதியாக நடைபெற நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆனாலும், கம்ப்யூட்டர் சாப்ட்வேர், தொலைத்தொடர்புத்துறை மற்றும் சில துறைகளில் கடந்த 15 ஆண்டுகளாக இந்தியா எட்டிய அதீத வளர்ச்சியும், அதைத் தொடர்ந்து கிட்டிய வேலைவாய்ப்புகளும்- வசதிகளும், நமது எண்ணங்களிலும், மற்ற மனிதர்கள் குறித்த நமது மதிப்பீடுகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டன. ஜாதி குறித்த தீண்டாமை விலகி, அந்தஸ்து தீண்டாமை நம்மை முழுவதுமாக ஆக்ரமித்து விட்டது.
நுனி நாக்கு ஆங்கிலமும், கும்மிருட்டில் கையில் மதுக்கிண்ணங்களும், அருகில் சுழன்றாடும் இளம்பெண்களும் தான் வாழ்க்கை; அந்த வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்கள் மட்டுமே மனிதர்கள்; மற்ற அனைவரும் நாகரீகம் தெரியாதவர்கள்... குறிப்பாக, உழைக்கும் வர்க்கமும்- விவசாயிகளும் தீண்டத்தகாதவர்கள் என்ற எண்ணம் வளர்ந்து கொண்டே போகிறது.
அதன் விளைவுதான் மே தினமாகட்டும், மற்ற எந்த முக்கிய நாட்களாகட்டும், நம்மைப் பொருத்தவரையில் வெறும் விடுமுறை நாட்களாகி விட்டன. ஒரு நாட்டின் இதயம் போன்றவர்கள் விவசாயிகளும், தொழிலாளர்களும் தான்! இதயத்தை ஒதுக்கி வைத்து விட்டு எந்த இயக்கமும் இருக்க முடியாது.
இந்த மே தினத்திலாவது, உழைப்பின் மேன்மையை ஒருகணமேனும் போற்றிவிட்டு, அந்தஸ்து தீண்டாமை நம்மை விட்டு விலக முயற்சி செய்ய சூளுரைத்து, மேதின மேன்மையை உலகோர் உணரச் செய்ய உறுதி கொள்வோமா?