விதுர நீதி!

புராண காலம் தொடங்கி, இன்றைய நவீன காலம் வரை எவ்வளவோ அமைச்சர்கள் தங்கள் மதிநுட்பத்தை பல்வேறு விதமாக, பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால், திருதராஷ்டிரன் அமைச்சரவையை அலங்கரித்த விதுரன் போன்ற மதிநுட்பமும், நேர்மையும், யாருக்கும் அஞ்சாமல் நல்லவற்றை எடுத்துரைத்தல் போன்றவற்றில் விதுரனுக்கு இணையாக சொல்லக்கூடியவர்கள் வெகு சிலரே! காலத்தை வென்று நிற்கும் விதுரநீதி, இன்றைய அரசியல்வாதிகளுக்கு மிகவும் பொருந்தக்கூடியது! விதுரநீதியில் லட்சத்தில் ஒரு பங்கு நமக்கு கைகூடினாலும் அது நாம் செய்யும் பாக்கியமே!


Friday, May 28, 2010

வாய்ச்சொல் வீரர்கள்!

சி.ஆர்.பி.எப். வீரர்கள் சுட்டுக்கொலை; தண்டவாளத்தில் நாசவேலை- ரெயில்கள் கவிழ்ப்பு- ஏராளமானோர் பலி; கண்ணிவெடி வைத்து வாகனங்கள் தகர்ப்பு; அதிகாரிகள் கடத்தல்;

ஆம்! நக்சலைட்டுகள் தாக்குதல்களின் விளைவுகள்தான் நாம் மேலே சொன்னவை! தினம்தினம் அனைத்து பத்திரிகைகளையும் ஆக்கிரமிக்கும் இந்த செய்திகளும், அவற்றைத் தொடர்ந்து, மத்திய- மாநில அமைச்சர்களின் அறிக்கைகளும், தினத்தந்தியின் சிந்துபாத் கதை போல முடிவில்லாமல், ஆனால் சுவாரசியம் குறையாமல் சென்று கொண்டே இருக்கின்றது!

இதற்கு முன்பு இருந்த உள்துறை அமைச்சர், தனது உடை அலங்காரத்தில் காட்டிய அக்கறையில் சிறுதுளி கூட, உள்நாட்டு பாதுகாப்பு குறித்த விஷயங்களில் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து பதவி இழக்க நேரிட்டது. நிதி அமைச்சகத்தில் திறம்பட செயலாற்றிய தமிழகத்தின் ப. சிதம்பரம் அவர்கள் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றதும், நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பும், நிம்மதி பெருமூச்சும் எழுந்தது.

அவரும் “ஒரு வருடத்திற்குள் நக்சலைட்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்” என்று அழுத்தம்திருத்தமாக அறிவித்தார். ஆனால், நடந்ததோ வேறு. தங்களுடைய தாக்குதல் வேகத்தை தீவிரப்படுத்தினர். பாதுகாப்பு படையினர் உயிரிழப்பு பலமடங்கு அதிகரித்தது.

நக்சலைட்டுகளை கட்டுப்படுத்தும் பொறுப்பு யார் என்பது குறித்து மத்திய- மாநில அரசுகள் சண்டை போட்டுக்கொண்டன. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதா? அல்லது ராணுவத்தீர்வா? படைபலத்தை உபயோகிப்பது என்றால் எந்த அளவுக்கு பயன்படுத்துவது? நக்சலைட்டுகளுக்கு உள்ளூர் மக்களான பழங்குடியினர் ஆதரவு எந்த அளவுக்கு உள்ளது? எதனால் இந்த ஆதரவு? இப்படி பல கோணங்களில் இருந்து எழும் கேள்விகளுக்கு, ஆள்பவர்களிடம் இருந்து எந்தவித பதிலோ, தீர்வுக்கான வழிமுறைகளோ இல்லை.

ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் குற்றம் சாற்றிக் கொள்வதை பார்க்கும்போது, ஆள்வோரின் திறன் குறித்த சந்தேகங்களும், வருத்தங்களும் எழுவதை நிச்சயம் தவிர்க்க முடியாது. நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் மிக முக்கியமான பிரச்சினையில் தீர்வு காண முயலாமல்- முடியாமல் ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்கள் வறட்டு வாதம் மட்டுமே புரிந்து கொண்டிருப்பது அவமானமான விஷயம் மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட!

பாதுகாப்பு அமைச்சக பொறுப்பில் இருப்பவர்கள், தொலைநோக்கு திட்டங்களை தீட்டி, உறுதியுடன் செயல்படுத்தி, மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு வழிகாண வேண்டியவர்கள்! சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றிய இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் அவர்களை இதற்கு சிறந்த உதாரணமாக கூறலாம்.

ஆனால், திறம்பட செயலாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட உள்துறை அமைச்சர் இந்தப் பிரச்சினையில் செய்வதறியாது திகைத்து நிற்கும் நிலை வந்ததின் காரணம் என்ன? ஒட்டுமொத்த அரசின் தெளிவற்ற கொள்கைகளா? அல்லது, தெளிவான திட்டங்களை செயல்படுத்த வேண்டிய உறுதி இல்லாததாலா? இல்லை, ஓட்டு அரசியல் குறுக்கிடுகிறதா? ஜனத்தொகை அதிகம் உள்ள நாடுதானே, சில உயிர்கள் போனால்தான் என்ன என்று நினைப்பார்களோ?

காரணம் எதுவாக இருந்தாலும், உயிரிழப்புகளை தினந்தோறும் சந்தித்துக் கொண்டிருப்பது அப்பாவி பொதுமக்கள்தானே? நாட்டு குடிமக்களின் அடிப்படை உரிமைகளான உணவு, இருப்பிடம், கல்வி ஆகியவற்றை கொடுக்க வேண்டிய அரசுக்கு, மக்களின் பாதுகாப்பு என்பது தலையாயக் கடமை என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தவேண்டியது அவசியம்!

இன்றைய சீர்கெட்ட அரசியலில், வெற்று வாக்குறுதிகளும், வாய்ஜாலங்களும் சாதாரண மேடைப் பேச்சாளர்களுக்கு வேண்டுமானால் அவசியமான சங்கதியாக இருக்கலாம். ஆனால், நூறு கோடி மக்களைக் கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை ஆளும் பொறுப்பில் இருப்பவர்கள் செயல்திறன் மிக்கவர்களாக இருக்கவேண்டியது இந்த இக்கட்டான சூழலின் மிக முக்கியத் தேவையாகும்!

வாய்ச்சொல் வீரர்கள் மாறுவார்களா?

அழகிப் போட்டி எனும் கேலிக்கூத்து!

1994-ம் ஆண்டு உலக அழகிப் போட்டிகளில் சுஷ்மிதா சென்னும் ஐஸ்வர்யா ராயும் வெற்றிக்கொடி நாட்டிய பிறகு, அழகிப்போட்டிகள் பெரும்பாலான இந்திய இளம்பெண்களின் கனவு, இல்லை- இல்லை, லட்சியமாகவே ஆகிவிட்டன. மிஸ் யுனிவர்ஸ் முதல் மிஸ் உசிலம்பட்டி வரை அழகிப்போட்டிகள் நடக்காத இடங்களே இல்லை எனலாம்.

இந்தியாவிலேயே இந்த நிலை என்றால் அமெரிக்காவைப் பற்றி கேட்கவே வேண்டாம். அங்கேயே பிறந்து வளர்ந்த பெண்களாகட்டும், அல்லது பிற நாடுகளில் இருந்து குடியேறியவர்களாகட்டும், மிஸ் அமெரிக்கா பட்டம் சூடுவது அவர்களின் மிகப்பெரிய கனவு!

இந்த ஆண்டு அமெரிக்க அழகிப்போட்டியில் வெற்றி பெற்ற ரீமாவுக்கு ஒரு தனிச்சிறப்பு உள்ளது. ஆம், அமெரிக்க அழகிப்போட்டியில் வென்ற முதல் இஸ்லாமிய பெண் என்பதுதான் அது! லெபனான் நாட்டைச்சேர்ந்த ரீமா, மூன்று வயதிலேயே அமெரிக்காவுக்கு குடியேறி விட்டார்.

பொது இடங்களில் பெண்கள் ஆடை குறைப்பு செய்து, தங்கள் உடல் அழகை வெளிச்சம் போட்டுக் காட்டுவது இஸ்லாமிய கோட்பாடுகளின்படி தவறு- தடையும் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், தங்களது பெற்றோர்கள் அளித்த ஆதரவினாலும், ஊக்கத்தினாலும்தான் தன்னால் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற முடிந்தது என்கிறார், ரீமா!

லெபனான் பழமைவாதிகள் மத்தியில் ரீமா அழகிப்போட்டியில் கலந்து கொண்டதே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் இப்போது அடுத்த பிரச்சினை வெடித்துள்ளது.

2007-ம் ஆண்டு டெட்ராய்ட் நகரில், நிர்வாண நடனங்களுக்கு புகழ்பெற்ற ஒரு இரவு விடுதியில் “போல் டான்ஸ்” எனப்படும் அரை நிர்வாண ஆட்டம் போட்டதாக ரீமா மீது இப்போது குற்றச்சாட்டு வீசப்பட்டுள்ளது. உலக அழகிப்போட்டி விதிகளின்படி இது தவறு என்பதால், விசாரணை நடத்தப்படுகிறது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ரீமாவின் பட்டம் பறிக்கப்படும்.

அமெரிக்காவில் இது ஒன்றும் புதிதல்ல. கடந்த ஆண்டு வெற்றி பெற்ற பெண்ணும், செக்ஸ் வீடியோவில் தோன்றிய குற்றச்சாட்டினால் அழகிப் பட்டத்தை இழக்க நேரிட்டது.

ஆனால், பெண்ணுரிமை ஆர்வலர்கள் கருத்தோ வேறுவிதமாக உள்ளது. ஆணுக்குப் பெண் சரிநிகராக கருதப்படும் இந்தக்காலத்தில், பெண்களின் உடல் அழகை வெளிச்சமிட்டுக் காண்பிக்கும் இத்தகையப் போட்டிகள், அவர்களை வெறும் சதைப்பிண்டமாகவும் கவர்ச்சிப் பாவைகளாகவும் பார்க்கும் வக்கிர உணர்வைத்தான் காட்டுகிறதே ஒழிய, அழகுணர்ச்சி என்பதெல்லாம் போலி மேற்பூச்சு வாதம் என்று கடுமையாக சாடுகிறார்கள்.

அரைகுறை ஆடையுடன் நைட் கிளப்பில் ஆடியதை குற்றமாக பார்க்கும் போட்டி அமைப்பாளர்கள் செய்வது என்ன? போட்டியில் கலந்து கொள்ளும் அத்தனை பெண்களையும் டூ-பீஸ் நீச்சல் உடைகளுடன் ஒய்யார நடை போட வைத்து, அதை தொலைகாட்சிகள் மூலம் உலகம் முழுக்க காண்பித்து, மில்லியன் மில்லியனாக டாலர்களை குவிப்பதை என்னவென்று சொல்வது? அரை நிர்வாண ஆட்டம் தவறு என்றால் இது எந்தவகையில் சாரும்?

உலக அழகிப்போட்டி இறுதிச்சுற்றில் ஒரு கேள்வி கேட்கப்படும். இது அழகிகளின் அறிவை சோதிப்பதற்காகவாம்! ஒரே கேள்வியிலேயே எதிரில் இருப்பவர்களின் அறிவை தெரிந்து கொள்ள இவர்கள் என்ன அந்த படைப்பு கடவுள் பிரம்மாவா?

அதற்கு முன்பு வரை அந்தப் பெண்களின் அங்கங்களையும் அசைவுகளையும் முழுமையாக வெளிச்சம் போட்டு காட்டுவதற்காக, அனைத்து தகிடுதத்தங்களையும் செய்துவிட்டு, ஒரே ஒரு கேள்வி கேட்டு விட்டு, நாங்கள் அறிவையும் சோதிக்கிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வது கடைந்தெடுத்த பித்தலாட்டமே அன்றி வேறு என்ன?

மற்றவர்களை வெறும் ஆண்களாகவும் பெண்களாகவும் மட்டுமே பார்த்து, Ladies and Gentlemen என்றே அழைத்துக் கொண்டிருந்த இதே அமரிக்க தேசத்தில், சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஞானஒளியை பரப்பச் சென்ற விவேகானந்தர், தனது புகழ்பெற்ற சிகாகோ உரையின்போது, Brothers and Sisters என்று பேச்சைத் துவக்கியத்தின் மூலம், மிகப்பெரிய உண்மையை அந்த தேசத்தை உணரச் செய்தார். ஆம்! பெண்ணை சகோதரியாகவும் பார்க்கலாம் என்ற உணர்வை ஒரே சொல்லின் மூலம் உணர்த்திய உணர்வுபூர்வமான உரை அது!

“மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என முழக்கமிட்ட முண்டாசுக்கவிஞன் இன்று உயிரோடிருந்து, “இழிவுகளுக்கு இணங்கிப் போகும் இளம் பெண்களைக்” காண நேர்ந்திருந்தால் என்னவாகி இருப்பானோ?

Tuesday, May 18, 2010

இங்கிலாந்து ஜனநாயகம் எங்கே போகிறது?

நமது ஆட்சி முறை, அரசியல் அமைப்பு சட்டம், நீதித்துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் பெரும்பாலும் இங்கிலாந்து நாட்டின் தழுவலாகவே உள்ளது நாம் அறிந்ததே! நூறு ஆண்டுகளுக்கு மேலாக அவர்களிடம் நாம் அடிமைப்பட்டிருந்ததன் விளைவு இது!

கடந்த அறுபது ஆண்டு காலத்தில் பாராளுமன்ற- சட்டமன்ற ஆட்சி முறைகளில் எண்ணற்ற மாற்றங்கள் வந்து விட்டது. அதில் குறிப்பிடத்தக்கது, பல்வேறு கட்சிகள் சேர்ந்து அமைக்கும் கூட்டணி ஆட்சி முறை! அடிப்படை கொள்கையிலேயே முரண்படும் கட்சிகள் கூட, அதிகாரம் ஒன்றை மட்டுமே பொது குறிக்கோளாகக் கொண்டு அமையும் இத்தகைய சந்தர்ப்பவாத கூட்டணி ஆட்சி முறையில், முதலில் பலி கொடுக்கப்படுவது நேர்மையும், தார்மீக சித்தாந்தங்களும்தான்! மத்தியிலும், பல்வேறு மாநிலங்களிலும் இதுதான் இன்றைய நிதர்சனம்!

மத்தியில் கூட்டணி ஆட்சி முறை வழக்கத்துக்கு வந்த பின்னர், மாநில கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகின்ற நிர்ப்பந்தத்தின் காரணமாக- அந்தந்த மாநிலத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் நிலையினை, கூட்டணி ஆட்சியை ஆதரிப்பவர்கள் சுட்டிக்காட்டுவது உண்டு! ஆனாலும், மாநில கட்சிகளின் ஆதிக்கம் மையத்தில் வலுப்பெறும் பட்சத்தில் ஊழல் அதிகரித்து இருப்பதுதான் யதார்த்தத்தில் நாம் அனுபவிக்கும் உண்மை!

சமீபத்தில், பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக வெட்டுத் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, ஆளும்கட்சியினர் தங்களுக்கான ஆதரவை பெரும் முயற்சியில், சில மாநிலக்கட்சித் தலைவர்களின் ஊழல் விவகாரங்கள் பெருமளவில் சமரசம் செய்து கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. ஜனநாயக ஆட்சி முறையின் மோசமான விளைவு இது என்பதை அறிவார்ந்த பெருமக்கள் அனைவரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

கூட்டணி ஆட்சி முறை இவ்வாறாக மிகவும் அபாயகரமான பாதையில் பயணித்துக் கொண்டிருந்தாலும், இதற்கான தீர்வு குறித்து யாருக்குமே ஒரு தெளிவில்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய உண்மை.

சரி, ஆரம்பத்தில் ஏன் இங்கிலாந்து பற்றி குறிப்பிட்டோம் எனத் தோன்றுகிறதா? நமது ஜனநாயகம் பயணிக்கும் அதே மோசமான பாதையில், இங்கிலாந்தும் பயணிக்க ஆரம்பித்து விட்டதின் அறிகுறி தெரிய ஆரம்பித்து விட்டது. ஆம்! மும்முனை போட்டி நிலவிய இங்கிலாந்து தேர்தலில், ஆளும் கட்சி தோல்வியைத் தழுவிய போதும், எந்த கட்சிக்கும் தனிப்பெரும் ஆதரவு கிட்டவில்லை. இதைத் தொடர்ந்து, 13 ஆண்டுகளாக எதிர் வரிசையில் அமர்ந்திருந்த பழமைவாதிகள் கட்சி, சுதந்திர ஜனநாயக கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்து உள்ளது.

இங்கிலாந்து வரலாற்றிலேயே கூட்டணி ஆட்சி ஏற்படுவது இதுதான் முதல் முறை! இது சாதனையா அல்லது வேதனையா? என்பது போக போகத்தான் தெரியும். நமது நாட்டில் உள்ளது போலவே, இந்த கட்சிகளுக்கு இடையேயும் அடிப்படையிலேயே கொள்கை வித்தியாசம் பெருமளவில் உள்ளது. இங்குள்ள அரசியல் பேரங்களைப் போலவே, அங்கும் அரங்கேறியது. கூட்டணி கட்சித் தலைவருக்கு துணை பிரதமர் பதவி வழங்கப்பட்டு, ஆட்சி அமைக்கப்பட்டது.

நல்லவற்றை யார் சொன்னாலும், எங்கு கண்டாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது அறிவுடையோர் வாக்கு. ஆனால், அதிகாரத்தைக்’ கைப்பற்றும் வழிமுறை எப்படிப்பட்டதாக இருந்தாலும், எந்த நாடு கடைப்பிடித்து வந்தாலும், அதை அப்படியேத் தழுவி, பதவியில் அமர்ந்து விடுவதுதான் அரசியல்வாதிகளின் குறிக்கோள் என்பது இங்கிலாந்தில் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி ஆட்சி என்பது ஐரோப்பாவுக்கு புதிதில்லை என்றாலும், உயர்ந்தபட்ச அரசியல் நெறிமுறைகளைப் பின்பற்றும் வழக்கம் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இன்றைக்கும் நிலவுகின்றது. இந்நிலையில், பதவிக்கான பேரங்களுடன் இங்கிலாந்து ஜனநாயகம் துவங்கி இருக்கும் இந்த புதிய பாதை, ஐரோப்பிய அரசியல் ஆர்வலர்களிடம் சற்று கவலையை விதைத்து இருப்பதை மறுக்க முடியாது!

இங்கிலாந்து ஜனநாயகத்தையாவது இறைவன் காப்பாற்றுவானாக!

Tuesday, May 4, 2010

நெஞ்சு பொறுக்குதில்லையே...!

கசாப்! – நூறு கோடி இந்தியர்கள் மனதிலும் வெறுப்பின்- கோபத்தின்- ஆற்றாமையின்- அவமானத்தின் சின்னமாய் ஒன்றரை ஆண்டுகளாக, நெருஞ்சி முள்ளாக உறுத்திக் கொண்டிருந்தவன். பட்டப்பகலில் ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, “கொலை எனக்கு தொழில்” என்பது போன்று, அப்பாவி மக்களை கண்ணை மூடிக் கொண்டு சுட்டுத் தள்ளியவர்களில், உயிரோடு பிடிபட்ட ஒரு பாவி!

டி.வி. சேனல்களில் வரும் ரியாலிட்டி ஷோக்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில், கேமரா கண்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தங்களது கொலைத்தொழிலை அரங்கேற்றிய இந்த கயவன், “தப்பு செய்தான்” என்று நிரூபிப்பதற்கே நமது சட்டத்திற்கு ஒன்றரை வருடம் ஆகியுள்ளது. அதிலும், உடந்தையாக இருந்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட இரண்டு இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்- சாட்சிகள் போதவில்லையாம்!

நமது நீதித்துறை நேர்மையாக நடப்பதற்கு இதுவே சாட்சி என உள்துறை அமைச்சரும் பெருமிதப்படுகிறார். இவ்வளவு பெரிய மாபாதக செயலை செய்தவர்களை குற்றத்தைக் கூட நிரூபிக்கத் திராணி இல்லாத விசாரணை அதிகாரிகளை கண்டிப்பதை விட்டுவிட்டு, பெருமிதப்படும் போக்கை என்னவென்று சொல்ல...?

இந்தியாவை மட்டுமல்ல, உலகத்தையே பதைபதைக்க வைத்த நேரடி தீவிரவாத செயலை செய்தவர்களை தண்டிக்கவே நமக்கு சாட்சிகள் போதவில்லையே... இந்த லட்சணத்தில் உள்நாட்டில் மறைமுக தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று எப்படி நம்புவது?

ஆம்- கேதான் தேசாய் நினைவிருக்கிறதா? ஒழுக்கத்திற்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக, எளிமையின் சின்னமாக வாழ்ந்த மொரார்ஜி தேசாய் வாழ்ந்த இந்த புண்ணிய தேசத்தில்தான் கேதான் தேசாய் போன்ற பணப்பேய்களும் வாழுகின்றன! ஆயிரம் ரூபாய் நோட்டை முழுதாக கண்ணால் கண்டிராத மக்களை பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் நமது நாட்டில், 1800 கோடி ரூபாய் பணத்தை ரொக்கமாக வீட்டில் வைத்திருந்த மாமனிதர்தான் இந்த கேதான் தேசாய்!

எவ்வளவு ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் சேர்ந்தால் 1800 கோடி ரூபாய் வரும் என்பதை கணக்கிட ராமானுஜர் கூட சற்று திணறித்தான் போவார்! ஆனால், இந்த பணப்பேய் திணறாமல், சிதறாமல் இவ்வளவு பணத்தையும் தனது வீட்டில் ஒளித்து வைத்து, பார்த்து பார்த்து ஆனந்தப்பட்டுக் கொண்டு இருந்திருக்கிறது!

வாழும் கடவுள்களாக மக்கள் கருதும் டாக்டர்களை உருவாக்கும் கல்லூரிகளை அனுமதிப்பதில் செய்த ஊழல் மூலம் சம்பாதித்த- அல்ல, அல்ல, கொள்ளை அடித்ததின் மூலமாக கிடைத்த பணம்தான் இது! இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது இந்த பணம் மட்டுமல்ல, டன் டன்னாக தங்கக் கட்டிக்களும்தான்! இவற்றின் மொத்த மதிப்பைக் கணக்கிட்டால், ஒரிசா போன்ற மாநிலங்களின் ஒரு வருட பட்ஜெட்திற்கு நிகராக வருகிறது!

இவ்வளவு பணத்தை லஞ்சமாக கொட்டிக் கொடுக்கும் மருத்துவக் கல்லூரிகள், எந்த மாதிரியான டாக்டர்களை உருவாக்குவார்கள்? அவர்களால் எத்தனை லட்ச மக்களின் உயிருக்கு அபாயம் உள்ளது? எத்தனை கோடி மக்கள் நிரந்தர ஊனமாகக் கூடிய பேரபாயம் உள்ளது? இது ஒருவகையான தீவிரவாதம் இல்லையா? இவர்கள் தீவிரவாதிகளுக்கு இணையான தண்டனை கொடுக்கப்பட வேண்டியவர்கள் அல்லவா?

அரசியல்வாதிகளின் ஆதரவு இல்லாத ஒரு கசாப்புக்கு தண்டனை கொடுக்கவே இவ்வளவு அவகாசமும் சாட்சிகளும் தேவைப்படுகின்றனவே, எல்லா ஆதரவுகளும் பணபலமும் இருக்கும் வாய்ப்புள்ள கேதான் தேசாய் குற்றம் நிரூபிக்கப்படுமா? அல்லது இதற்கும் சாட்சிகள் இல்லாமல், இந்தப் பணம் முழுவதும் அவரது சேவையைப் பாராட்டி வழங்கப்பட்ட பரிசுகள் என்று கூட சொல்லுவார்கள்!

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்....!