சி.ஆர்.பி.எப். வீரர்கள் சுட்டுக்கொலை; தண்டவாளத்தில் நாசவேலை- ரெயில்கள் கவிழ்ப்பு- ஏராளமானோர் பலி; கண்ணிவெடி வைத்து வாகனங்கள் தகர்ப்பு; அதிகாரிகள் கடத்தல்;
ஆம்! நக்சலைட்டுகள் தாக்குதல்களின் விளைவுகள்தான் நாம் மேலே சொன்னவை! தினம்தினம் அனைத்து பத்திரிகைகளையும் ஆக்கிரமிக்கும் இந்த செய்திகளும், அவற்றைத் தொடர்ந்து, மத்திய- மாநில அமைச்சர்களின் அறிக்கைகளும், தினத்தந்தியின் சிந்துபாத் கதை போல முடிவில்லாமல், ஆனால் சுவாரசியம் குறையாமல் சென்று கொண்டே இருக்கின்றது!
இதற்கு முன்பு இருந்த உள்துறை அமைச்சர், தனது உடை அலங்காரத்தில் காட்டிய அக்கறையில் சிறுதுளி கூட, உள்நாட்டு பாதுகாப்பு குறித்த விஷயங்களில் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து பதவி இழக்க நேரிட்டது. நிதி அமைச்சகத்தில் திறம்பட செயலாற்றிய தமிழகத்தின் ப. சிதம்பரம் அவர்கள் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றதும், நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பும், நிம்மதி பெருமூச்சும் எழுந்தது.
அவரும் “ஒரு வருடத்திற்குள் நக்சலைட்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்” என்று அழுத்தம்திருத்தமாக அறிவித்தார். ஆனால், நடந்ததோ வேறு. தங்களுடைய தாக்குதல் வேகத்தை தீவிரப்படுத்தினர். பாதுகாப்பு படையினர் உயிரிழப்பு பலமடங்கு அதிகரித்தது.
நக்சலைட்டுகளை கட்டுப்படுத்தும் பொறுப்பு யார் என்பது குறித்து மத்திய- மாநில அரசுகள் சண்டை போட்டுக்கொண்டன. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதா? அல்லது ராணுவத்தீர்வா? படைபலத்தை உபயோகிப்பது என்றால் எந்த அளவுக்கு பயன்படுத்துவது? நக்சலைட்டுகளுக்கு உள்ளூர் மக்களான பழங்குடியினர் ஆதரவு எந்த அளவுக்கு உள்ளது? எதனால் இந்த ஆதரவு? இப்படி பல கோணங்களில் இருந்து எழும் கேள்விகளுக்கு, ஆள்பவர்களிடம் இருந்து எந்தவித பதிலோ, தீர்வுக்கான வழிமுறைகளோ இல்லை.
ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் குற்றம் சாற்றிக் கொள்வதை பார்க்கும்போது, ஆள்வோரின் திறன் குறித்த சந்தேகங்களும், வருத்தங்களும் எழுவதை நிச்சயம் தவிர்க்க முடியாது. நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் மிக முக்கியமான பிரச்சினையில் தீர்வு காண முயலாமல்- முடியாமல் ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்கள் வறட்டு வாதம் மட்டுமே புரிந்து கொண்டிருப்பது அவமானமான விஷயம் மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட!
பாதுகாப்பு அமைச்சக பொறுப்பில் இருப்பவர்கள், தொலைநோக்கு திட்டங்களை தீட்டி, உறுதியுடன் செயல்படுத்தி, மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு வழிகாண வேண்டியவர்கள்! சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றிய இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் அவர்களை இதற்கு சிறந்த உதாரணமாக கூறலாம்.
ஆனால், திறம்பட செயலாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட உள்துறை அமைச்சர் இந்தப் பிரச்சினையில் செய்வதறியாது திகைத்து நிற்கும் நிலை வந்ததின் காரணம் என்ன? ஒட்டுமொத்த அரசின் தெளிவற்ற கொள்கைகளா? அல்லது, தெளிவான திட்டங்களை செயல்படுத்த வேண்டிய உறுதி இல்லாததாலா? இல்லை, ஓட்டு அரசியல் குறுக்கிடுகிறதா? ஜனத்தொகை அதிகம் உள்ள நாடுதானே, சில உயிர்கள் போனால்தான் என்ன என்று நினைப்பார்களோ?
காரணம் எதுவாக இருந்தாலும், உயிரிழப்புகளை தினந்தோறும் சந்தித்துக் கொண்டிருப்பது அப்பாவி பொதுமக்கள்தானே? நாட்டு குடிமக்களின் அடிப்படை உரிமைகளான உணவு, இருப்பிடம், கல்வி ஆகியவற்றை கொடுக்க வேண்டிய அரசுக்கு, மக்களின் பாதுகாப்பு என்பது தலையாயக் கடமை என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தவேண்டியது அவசியம்!
இன்றைய சீர்கெட்ட அரசியலில், வெற்று வாக்குறுதிகளும், வாய்ஜாலங்களும் சாதாரண மேடைப் பேச்சாளர்களுக்கு வேண்டுமானால் அவசியமான சங்கதியாக இருக்கலாம். ஆனால், நூறு கோடி மக்களைக் கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை ஆளும் பொறுப்பில் இருப்பவர்கள் செயல்திறன் மிக்கவர்களாக இருக்கவேண்டியது இந்த இக்கட்டான சூழலின் மிக முக்கியத் தேவையாகும்!
வாய்ச்சொல் வீரர்கள் மாறுவார்களா?