விதுர நீதி!

புராண காலம் தொடங்கி, இன்றைய நவீன காலம் வரை எவ்வளவோ அமைச்சர்கள் தங்கள் மதிநுட்பத்தை பல்வேறு விதமாக, பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால், திருதராஷ்டிரன் அமைச்சரவையை அலங்கரித்த விதுரன் போன்ற மதிநுட்பமும், நேர்மையும், யாருக்கும் அஞ்சாமல் நல்லவற்றை எடுத்துரைத்தல் போன்றவற்றில் விதுரனுக்கு இணையாக சொல்லக்கூடியவர்கள் வெகு சிலரே! காலத்தை வென்று நிற்கும் விதுரநீதி, இன்றைய அரசியல்வாதிகளுக்கு மிகவும் பொருந்தக்கூடியது! விதுரநீதியில் லட்சத்தில் ஒரு பங்கு நமக்கு கைகூடினாலும் அது நாம் செய்யும் பாக்கியமே!


Monday, September 10, 2012

பிம்பங்கள்...!

ள்ளதை உள்ளபடி காட்டுவதில் கண்ணாடிக்கு நிகர் வேறெதுவும் கிடையாது. நாம் குறிப்பிடுவது, முறையாக தயாரிக்கப்பட்ட கண்ணாடி... இத்தகைய கண்ணாடி ரசம் போனபின்னும் சிதையாத பிம்பத்தைக் காட்டக்கூடிய வல்லமை கொண்டது. மனித மனமும் கண்ணாடி போன்றதுதான்... ஆனால், ஒரே வித்தியாசம், உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்ள மனித மனம் எப்போதுமே விரும்புவதில்லை. அது, தங்கள் வசதிக்கு ஏற்றவாறு ஒரே பிம்பத்தை பல கோணங்களில் மாற்றிக் கொள்வதிலும், போலி அழகுக்கும், பொய்மைக்கும், சுயநலத்துக்கும் அளிக்கும் முக்கியத்துவங்களும் சொல்லில் வடிக்க முடியாத ஒன்று....

மனதின் இந்த குணத்திற்கு என்னதான் காரணமாக இருக்க முடியும்...? சற்றே ஆழ்ந்து சிந்தித்தால், குழந்தை முதலே யதார்த்தத்தை சொல்லித் தராமல், பொய்யான அழகையும் போலியான தேனொழுகும் பேச்சையும் குழந்தைப் பருவம் முதல் ஊட்டி வளர்க்கும் நமது பாரம்பரியம் இதில் மிகப்பெரிய பங்கை வகிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை...

உண்மை சுடும் என்பது சொல்வாக்கு... ஆம்! சிறு வயது முதலே அந்த சூட்டை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனம், அதிலிருந்து மெல்ல விலகி விலகி, வெகுதூரம் சென்று விடுகிறது. பள்ளிப் பருவத்தில் நன்றாகப் படிக்கும் மாணவனை ஆசிரியர் பாராட்டும்போது, நமது மனதில் அனாவசிய கோபம் உதயமாகிறது; நாம் நன்றாகப் படிக்காததால்தானே நமக்கு பாராட்டு கிடைக்கவில்லை என்ற உண்மை உரைத்தாலும், அதை ஏற்றுக்கொள்ள மறுத்து, அந்த ஆசிரியர் பாரபட்சம் காட்டுவதாகவே கோபம் ஏற்படுகிறது. அந்த இடத்தில் ஆசிரியரின் பிம்பம் நமக்கு வேறுவிதமாகவே தோன்றுகிறது.

கல்லூரி பருவத்தில் நம் கருத்தைக் கவர்ந்த பெண்ணின் உள்ளம், இன்னொருவரின் பால் நிலைகொண்டுள்ளது என்பது நமக்கு ஆற்ற முடியாத எரிச்சலை ஏற்படுத்துகிறது. அந்த இருவரின் மனமும் பல்வேறு காரணங்களினால் ஒரே அலைவரிசையில் பயணிப்பதால் தான் அவர்களுக்கு இடையே அந்த ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதை நம்மால் உணர முடிந்தாலும் உளமாற ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. தேவதை போன்ற அந்த பெண்ணின் பிம்பம் திடீரென அரக்கியாக தோன்றுகிறது.
கலாட்டா பருவங்களை எல்லாம் கடந்து, வேலை, குடும்பம், பொறுப்புகள் என்று ஆனபின், ஒவ்வொரு பிம்பங்களையும் மனம் ஏற்றுக்கொள்ளும் விதமே அலாதியானது. அதிலும், குடும்பத்தில் நுழைந்தாலோ, இல்லறத் துணைகளிடம் நாம் வெளிப்படுத்தும் பிம்பம், நாம் காணும் பிம்பம் எந்த நடிகர் திலகத்தினாலும் நடிக்க முடியாது என்பதுதான் அக்மார்க் உண்மை.

அனைத்திற்கும் மேலாக, பணிபுரியும் இடங்களில் நாம் நடந்து கொள்ளும் விதம், மற்ற பிம்பங்களை நம் மனதில் எப்படி தெரிகிறது என்பதை விட, நமது பிம்பத்தை நாமே பிரயத்தனப்பட்டு போலியாக மாற்றிக் கொள்ளும் ஆர்வம் இருக்கிறதே... சொல்லில் விவரிக்க முடியாது... ஒருகட்டத்தில், நம்முடைய உண்மையான பிம்பம் எதுவென்பது நமக்கே தெரியாமல் போவதுதான் இதன் உச்சகட்டம்... மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக நமது நடை, உடை, பாவனை அனைத்தையும் மாற்ற முயன்று, முழுமையாக மாறவும் முடியாமல், இயல்பாக இருக்கவும் முடியாமல் திரிசங்கு நிலையைத்தான் பெரும்பாலோர் அடைகின்றனர். சக ஊழியர்களிடம் பழக்கம் என்பதோ, போலியான சிரிப்பை அணிந்து கொண்டு, பொய்யான நலம் விசாரித்து, தகுதியற்ற புகழுரைகளை உரைத்து, தேவையற்ற ஆச்சரியங்களை வெளிக்காட்டி நாம் நடத்தும் நாடகங்கள் நவரசங்களையும் மிஞ்சி, நம்மை குறித்த மிக நிச்சயமான தவறான பிம்பத்தை நிலைநிறுத்தி விடுகிறது. சிறுவயது முதலே தேன் தடவிய சொல்லையே எதிர்பார்க்கும் மனம் என்பதாலோ என்னவோ, சர்க்கரைக்கும் சர்க்கரை போன்ற சாக்ரீனுக்கும் வித்தியாசம் உணர முடியாமல் செய்து விடுகிறது. நம்முடைய நியாயமான, அவசரமான நேரங்களில் யார் ஆதரவு கரம் நீட்டக்கூடியவர் என்பதை விட, எந்த நிமிடமும் நம்மைப் பற்றி போலியாகவே புகழுரைக்கும் நபரின் பிம்பமே மிகவும் அழகாக தெரிகிறது.

நிஜமான ஆசைகளை, தேவைகளுக்காக புதைத்துக் கொண்டு, நாகரீகம், நளினம் என்ற பெயரில் நம்மையே தொலைத்து, பொய்யான பிம்பமாக மாறிச்சென்று கொண்டே இருப்பதில், நவீன கார்ப்பரேட் நிறுவனங்களும், மாய சினிமா உலகமும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன என்றால், அது மிகையல்ல... பொருந்தாத கோட்- சூட் அணிவதிலாகட்டும், பேரிளம்பெண்களும் ஒப்பனை என்று ஒவ்வாத உடை அலங்காரம் செய்வதிலாகட்டும், நமது அடிப்படை பிம்பத்தை அடியோடு மாற்றி அமைப்பதில் முன்னோடியாக உள்ளன. அங்கு தொலையும் நமது பிம்பத்தை எங்கு கண்டெடுப்பது என்பதை என்றுமே அறியாமல், வெறும் அரூபங்களாகவே வாழ்ந்து மறைகிறோமே, இதற்காகவா பிறப்பெடுத்தோம்? எந்த பிம்பத்தில் இருந்து சிந்திப்பது என்பது கூட அறியாத பேதைகளாகி விட்டோமே...! உண்மையான மனித பிம்பத்தை எங்கு காண்போம்? எந்த பிம்பத்தில் நாம் இருந்தால் காண்போம்? விடை தர ஒரு உண்மையான பிம்பம் உலகில் உண்டென்றால், கண்ணில் காட்டுங்களேன்...!

No comments:

Post a Comment