முதலீடா? முழுங்கப்
போகும் முதலையா?
பாரத திருநாட்டை விட்டு பரங்கியரை வெளியேற்றி சரியாக 65 ஆண்டுகள்தான் நிறைவடைந்துள்ளன. தற்போது சில்லறை
வணிகத்தில் அந்நிய முதலீடு என்ற பெயரில் அவர்களை தாம்பூலம் வைத்து அழைக்கும்
முயற்சி கனஜோராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்னரும் பல்வேறு துறைகளில்
அந்நிய முதலீடு, இந்தியாவில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், சில்லறை வணிகத்தில்
அந்நிய முதலீடு என்பது ஒட்டுமொத்த இந்தியாவை அடகு வைக்கும், அல்ல, அல்ல... அடிமை
சாசனம் எழுதி வைக்கும் நிகழ்வேயன்றி வேறொன்றும் இல்லை...
விவசாயிகளிடம் நேரடியாக பெரு முதலாளிகள் கொள்முதல் செய்யும் வாய்ப்பு
ஏற்படும் என்பதால் இடைத்தரகர்கள் இன்றி, விவசாயிகளே நேரடியாக பயனடையும் சிறப்பான
திட்டம் இது என்பது ஆளும் தரப்பினரின் வாதம்... இதில் எவ்வளவு தூரம் உண்மை
இருக்கிறது என்று பார்ப்போம்... இவர்கள் கூறியது போன்று ஆரம்பத்தில் நேரடி
கொள்முதலும், அதனால் சற்று கூடுதல் விலையும், பல நேரங்களில் ரொக்கமாக முன்பணமும்
விவசாயிகளுக்கு கிடைக்கலாம்... இதனால், அவர்களும் சொர்க்கத்தை கண்டுவிட்டதாகவே
தொடக்கத்தில் நம்பலாம்... ஆனால், ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு என்ன ஆகும்? ஒவ்வொரு
பகுதியிலும் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும்... நிறைய
முன்பணம் கொடுத்து, தங்களது கைப்பிடிக்குள் முழுமையாக விவசாயிகளை அவர்கள் வைத்துக்
கொள்வார்கள்... அடுத்ததாக, “பொருளாதார பாதுகாப்பு” என்ற போர்வையில் குறிப்பிட்ட
ஆண்டுகள் வரை தங்களிடம் மட்டுமே குறிப்பிட்ட விலைக்கு விளைபொருட்களை விற்பனை செய்ய
வேண்டும் என்று நிர்ப்பந்தம் தரப்படும். மெல்ல மெல்ல, அந்நிய நிறுவனம் என்ற
பகாசூரன் வயிற்றுக்குள் அப்பாவி விவசாயி அடைக்கலம் ஆகி விடுவான்.... சில
காலங்களுக்கு முன்பு, ஒவ்வொரு பகுதியிலும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த
ஜமீன்தார்களை வேறு உருவத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் காணலாம்... அந்த நிலையில்,
மன்மோகன்களும், சிதம்பரம்களும், சோனியாக்களுமா இதற்கு பொறுப்பு ஏற்கப்
போகிறார்கள்?
எதற்கெடுத்தாலும், பிரிட்டனை பார், ஜெர்மனியை பார், பிரான்சை பார்
என்று மேலை நாடுகளை உதாரணம் காட்டும் இவர்கள், அந்த நாட்டின் மக்கள் தொகை என்ன?
அவர்கள் நாட்டு வளம் என்ன? என்பனவற்றை எல்லாம் இந்தியாவுடன் ஒப்பிடுவார்களா? நமது
ஒப்பீடு எப்போதும் சீனாவுடன் இருப்பதே சரியானதாக இருக்க முடியும்... மக்கள் தொகை
ஏறக்குறைய ஒரே அளவில் இருக்கும் இந்த நாட்டை ஒப்பிடுவதுதானே முறையாக இருக்க
முடியும்? இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்கள் தொகை எண்ணிக்கையே
ஒட்டுமொத்த ஐரோப்பாவை விட அதிகம் என்பதை இந்த பொருளாதார மேதைகள் கருத்தில்
கொள்ளாதது ஏன்?
ஏன் தெரியுமா? இவர்கள் அனைவரும் போலி கவுரவத்துக்காக வாழ்பவர்கள்... இவர்களுக்கு
120 கோடி இந்தியர்களின் வாழ்க்கை ஸ்திரத்தன்மையோ,
அவர்களது மேம்பாடோ, அல்லது அவர்களிடம் இருந்து கிட்டும் பாராட்டோ முக்கியம்
அல்ல... ஒபாமாவும், கேமரூனும், ஏஞ்சலாவும் பாராட்டி விட்டால் போதும், தங்களது
ஜென்மம் சாபல்யம் அடைந்து விட்டதாகவே கருதுவர்... போதாக்குறைக்கு, ஆங்கில செய்தி
சேனல்களில் சொகுசு சோபாக்களில் ஒய்யாரமாக சாய்ந்து கொண்டு, இந்தியாவில் கிராமம்
என்று ஒன்று இல்லாத மாதிரியும், டெல்லியும், மும்பையும், பெங்களூருவும் (இந்தப்
பட்டியலில் சென்னை கூட நிறைய சமயங்களில் இடம்பிடிக்காது) மட்டுமே ஒட்டுமொத்த
இந்தியா என்று பேசிக் கொண்டிருக்கும் அறிவுஜீவிகளும் பாராட்டித் தள்ளினால்
போதும்... நாற்பது கோடி இந்தியன் ஒருவேளை சோற்றுக்கு அல்லல்படுவதை பற்றி
யாருக்கென்ன கவலை?
போலி கவுரவத்துக்கும், பொய்மை வாழக்கைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைகளை
காவு கொடுத்து விட்ட நாம், ஒட்டுமொத்த இந்தியாவையும் முதலைகள் முழுங்கிவிட
அனுமதிக்கப் போகிறோம்... “பெப்சி”க்களும், “கோக்”களும் ஆக்டோபஸ் போன்ற குளிர்பான
சந்தையையே இன்று முழுங்கி ஏப்பம் விட்டு விட்டதை கண்டபிறகும், இதை ஆதரிப்போரை என்ன
சொல்வது? காந்தியும், நேதாஜியும் பிறக்காமலேயே இருந்திருக்கலாம்... பரங்கியரே
தொடர்ந்து ஆட்சி செய்திருக்கலாம்...!!!
No comments:
Post a Comment