விதுர நீதி!

புராண காலம் தொடங்கி, இன்றைய நவீன காலம் வரை எவ்வளவோ அமைச்சர்கள் தங்கள் மதிநுட்பத்தை பல்வேறு விதமாக, பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால், திருதராஷ்டிரன் அமைச்சரவையை அலங்கரித்த விதுரன் போன்ற மதிநுட்பமும், நேர்மையும், யாருக்கும் அஞ்சாமல் நல்லவற்றை எடுத்துரைத்தல் போன்றவற்றில் விதுரனுக்கு இணையாக சொல்லக்கூடியவர்கள் வெகு சிலரே! காலத்தை வென்று நிற்கும் விதுரநீதி, இன்றைய அரசியல்வாதிகளுக்கு மிகவும் பொருந்தக்கூடியது! விதுரநீதியில் லட்சத்தில் ஒரு பங்கு நமக்கு கைகூடினாலும் அது நாம் செய்யும் பாக்கியமே!


Monday, September 10, 2012


“அதையும் தாண்டியது” குடும்பம்...


“அரியணைக்கு அப்பாலும் அஸ்தினாபுரம் உள்ளது” என்பது மகாபாரதத்தில் பீஷ்மரிடம் விதுரர் கூறும் பொருள் பொதிந்த ஒரு வாக்கு...! ஆம்...! அஸ்தினாபுர மன்னன் என்ற அடிப்படையில் துரியோதனன் மீது அளவு கடந்த விசுவாசம் காட்டும் பீஷ்மரை, மன்னன் என்ற தனி மனிதனை தாண்டி, ஒட்டுமொத்த மக்கள் நிறைந்த அஸ்தினாபுரத்துக்கு எது நல்லதோ அதை செய்யும்படி விதுரர் வேண்டுவதே அந்த வாக்கின் பொருள்...

உலகிலேயே குடும்ப அமைப்பில் மிகவும் பாரம்பரியமும், பழமையும் கொண்ட இந்தியாவில், தற்போது ஒரு புதிய சட்டத்தை அமல்படுத்த தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. வேலைக்கு செல்லாமல் குடும்பத்தை மட்டுமே கவனித்துக் கொண்டு வீட்டில் இருக்கும் மனைவிக்கு கட்டாயம் ஒரு தொகையை சம்பளம் போன்று மாதா மாதம் கணவன் தரவேண்டும் என்பதுதான் அது...

கூட்டுக்குடும்பத்துக்கு பேர்போன இந்தியாவில், அந்த முறை சிறிது சிறிதாக மாறிக் கொண்டே வந்தாலும், இன்றைக்கும் அடிப்படை குடும்ப அமைப்பு என்பது அப்படியேதான் உள்ளது. சில பெருநகரங்களில் உள்ள சில உயர் இடங்களில் இந்த அமைப்பு சற்று மாறுபட்டிருக்கலாம்; ஆனால், பெரும்பான்மையான குடும்பங்களில் இந்திய குடும்பங்களுக்கே உரிய அடிப்படை கட்டமைப்பு சிதையாமல் தான் உள்ளது. கணவனின் வருவாயை மனைவிக்கு தெரியும் வகையிலேயே கையாளுவதும், குடும்பத்தின் தேவைகளை சேர்ந்தே முடிவு செய்வதும் (விதிவிலக்குகளை விட்டு விடலாம்), இன்னும் சொல்லப் போனால் நிதி தொடர்பான பல முடிவுகளை மனைவி எடுப்பதும்தான், நமது பாரம்பரியமாக உள்ளது.

வீட்டை நிர்வகிக்கும் பெண்களின் பங்கு, அலுவலகத்துக்கு சென்றோ வியாபாரம் செய்தோ சம்பாதிக்கும் ஆண்களின் பங்கிற்கு சற்றும் குறைவில்லாதது என்பதில் யாருக்கும் மறுப்பு இருக்க முடியாது. குறிப்பாக, குழந்தைகள் பிறந்ததில் இருந்து, அவர்களை பாலூட்டி, தாலாட்டி, சீராட்டி வளர்ப்பது என்பது பல நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பதற்கு சமம் என்றால் அது மிகையல்ல... ஒருநாள் நாம் வீட்டில் இருந்து, குழந்தைகளின் தேவைகளை முழுமையாக கவனித்துப் பார்த்தால் இதன் முக்கியத்துவம் புரியும். அது மட்டுமல்ல, காலையில் பால்காரனில் தொடங்கி, பேப்பர்காரன், மளிகை கடை, காய்கறி கடை, சமையல், வீட்டை சுத்தம் செய்தல், துணி துவைத்தல் என அவர்கள் கையாளும் வேலை, பார்ப்பதற்கு எளிதாக தெரிவதற்கு காரணமே, அவர்கள் அந்த வேலைகளை அநாயசமாக கையாளும்வது தான்... இத்தனையும் தாண்டி, அலுவலகத்தில் இருந்து திரும்பும் கணவனை முகமலர்ச்சியுடன் வரவேற்று உபசரிப்பதிலாகட்டும், இரவில் தாம்பத்யம் புரிவதிலாகட்டும், குடும்பத் தலைவியின் பங்கு எதனாலும் எடை போட இயலாதது. இந்த அனைத்து செயல்களிலும் தன் குடும்பம் என்ற ஒன்றேதான் சுயநலமாக வெளிப்படும்.

அப்படிப்பட்ட குடும்பத் தலைவியின் பங்கை, தற்போது பணத்தால் ஈடுகட்ட முயற்சிப்பது தான் இந்த சட்டத்தின் நோக்கம் என்று ஒருசாராரும், இல்லை... இல்லை.... பொருளாதாரத்தில் அவர்கள் யாரை நம்பியும் இருக்க வேண்டியதில்லை என்ற நிலையை ஏற்படுத்துவதுதான் என்று அரசு தரப்பிலும் கூறுகின்றனர்.

எது எப்படி இருந்தாலும், இந்த உலகத்தில் இன்னும் வெகுசில விஷயங்களில் மட்டும்தான் பணத்தின் தாக்கம் முழுமையாக இல்லாமல் உள்ளது. அதில், உறவுகளுக்கு இடையே நிலவும் உண்மையான அன்பு மிக முக்கியமானது. குறிப்பாக, உண்மையான கணவன்- மனைவி உறவு என்பது, இந்த கமர்ஷியல் விளைவுகளுக்கு அப்பாற்பட்டது. அதிலும், சம்பளம் நிர்ணயித்து விட்டால், பிறகு சம்பளத்துக்கு ஏற்ற வேலை; வேலைக்கு ஏற்ற சம்பளம் என்ற எதிர்பார்ப்புகள் தோன்றாதா...? பணம் தொடர்பான எதிர்பார்ப்பு என்றைக்காவது மனிதனுக்கு திருப்தியைத் தருமா? பாசத்துக்கும் நேசத்துக்கும் அன்புக்கும் விலை நிர்ணயிப்பது தகுமா? குடும்பம் என்பது நமது நிதி அமைச்சகத்தின் திட்டங்களை எல்லாம் தாண்டியதல்லவா? அரியணைக்கு அப்பாலும் அஸ்தினாபுரம் உள்ளதைப் போல, சட்டதிட்டங்களை தாண்டியதல்லவா “குடும்பம்” என்ற நமது அற்புதமான கட்டமைப்பு...!!! அதை சிதைக்காமல் விட்டு வைப்போம்...!!!

No comments:

Post a Comment