என் கண்ணின் பாவையன்றோ, கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ”
விதுர நீதி
விதுர நீதி!
புராண காலம் தொடங்கி, இன்றைய நவீன காலம் வரை எவ்வளவோ அமைச்சர்கள் தங்கள் மதிநுட்பத்தை பல்வேறு விதமாக, பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால், திருதராஷ்டிரன் அமைச்சரவையை அலங்கரித்த விதுரன் போன்ற மதிநுட்பமும், நேர்மையும், யாருக்கும் அஞ்சாமல் நல்லவற்றை எடுத்துரைத்தல் போன்றவற்றில் விதுரனுக்கு இணையாக சொல்லக்கூடியவர்கள் வெகு சிலரே! காலத்தை வென்று நிற்கும் விதுரநீதி, இன்றைய அரசியல்வாதிகளுக்கு மிகவும் பொருந்தக்கூடியது! விதுரநீதியில் லட்சத்தில் ஒரு பங்கு நமக்கு கைகூடினாலும் அது நாம் செய்யும் பாக்கியமே!
Sunday, September 23, 2012
அன்பு... காலாவதியாகி விட்ட கடைச்சரக்கு...
என் கண்ணின் பாவையன்றோ, கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ”
Monday, September 17, 2012
Thursday, September 13, 2012
கருத்து சுதந்திரத்தின் காட்டுமிராண்டித்தனம்...
Monday, September 10, 2012
Monday, October 4, 2010
அமைதி விரும்பிகள்!
ஆதிகாலத்தில் “மதம்” பிடித்து திரிந்த மனிதனை முறைப்படுத்த வந்ததுதான் மதம்! உலகின் எந்த மதமாக இருந்தாலும், அடிப்படையான சில கோட்பாடுகள் ஒன்றாகவே இருப்பதை நாம் காணலாம். இந்து மதம், யூத மதம், அதில் இருந்து உருவான கிருத்தவ மதம், இஸ்லாமிய மதம், புத்த மதம் ஆகிய மதங்கள்தான் உலகம் முழுவதும் பிரதானமாக பின்பற்றப்படுகிறது. நமது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் எந்த மதமும் வன்முறையை ஆதரித்தது இல்லை.
ஆனால், மதத்தைப் பரப்பும் அல்லது காப்பாற்றும் முயற்சியில் நடைபெற்ற சிலுவைப் போர்கள், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக் மற்றும் மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளில் இன்றைக்கும் நடைபெறும் வன்முறைகள், அமைதி ஒன்றையே அடிப்படையாகக் கொண்ட புத்த மதம் பின்பற்றப்படும் கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, வியட்நாம், மியான்மர் மற்றும் பல நாடுகளில் நடைபெற்ற வன்முறைகள் என உலகம் முழுக்க மதத்தின் பெயரால், வன்முறைகளும் கொலைகளும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
நமது நாட்டிலும் மதத்தின் பெயரால் எண்ணற்ற வன்முறை சம்பவங்கள் நடந்து, அதன்மூலம் கணக்கற்ற மக்களின் உயிரையும் உடைமையும் இழந்திருக்கிறோம். ஆனால், நீண்ட காலத்திற்குப் பிறகு, இந்திய மக்களின் அமைதியை விரும்பும் குணமும், சகிப்புத்தன்மையும் அற்புதமாக வெளிப்பட்டதைக் காண முடிந்தது.
நவீன இந்தியாவில் மிக முக்கியமான நாட்கள் பட்டியலில் செப்டம்பர் 29-ந் தேதிக்கு குறிப்பிட்ட இடம் நிச்சயமாக உண்டு. அறுபது ஆண்டுகளுக்கு மேலாக சட்டப்படியான தீர்வை எதிர்பார்த்துக் கொண்டிருந்த இரண்டு சமுதாய மக்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இந்தியாவும் ஒருவித பதட்டத்தோடும் படபடப்போடும் காத்துக் கொண்டிருந்த நாள்! இந்திய மக்கள் அமைதி விரும்பிகள் என்பதை உலகுக்கு மீண்டும் ஒருமுறை அழுத்தம்திருத்தமாக நிரூபித்த நாள்!
ஆம்... தீர்ப்பு எப்படி இருக்குமோ, எந்த நேரம் வன்முறை வெடிக்குமோ என்று நாடு முழுக்க ஒருவித பயம் நிலவியதால், மத்திய- மாநில அரசுகளால் லட்சக்கணக்கில் பாதுகாப்பு படைவீரர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர். ஆனால், உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல், சட்டத்தின் முடிவை இருதரப்பினரும் அமைதியாகவும், ஆரவாரம் ஏதுமின்றியும் ஏற்றுக்கொண்ட விதம், ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற முன்மாதிரியை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது.
நாடு சுதந்திரம் பெற்றபோது நடைபெற்ற மதக்கலவரங்களால் மிகவும் நொந்து போன மகாத்மா காந்தியடிகள், கிட்டத்தட்ட நடைபிணமாகவே மாறிவிட்டார். அரும்பாடு பட்டு பெற்ற சுதந்திரத்தை ஒரே வருடத்தில் இப்படி பாழடிக்கிறார்களே என்ற வேதனை அவரை நிலைகுலையச் செய்து விட்டது. அவரது பிறந்தநாளை கொண்டாடும் இத்தருணத்தில் இந்திய மக்கள் நடந்து கொண்டவிதம், முதல் முறையாக அவரது ஆன்மாவை சாந்தி அடைய செய்து இருக்கும்.
எந்த ஒரு மனிதனுக்கும் நிம்மதியான- அமைதியான- சந்தோஷமான வாழ்க்கை தான் குறிக்கோளாக இருக்க முடியும். எந்த ஒரு மதமும், மத குருவும் அதற்கான வழியைத்தான் காட்ட வேண்டும். அதை விடுத்து, ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்பி விட்டு, அதன்மூலம் எரியத் தொடங்கும் நெருப்பில் குளிர் காய்பவர்களையும் மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இப்போது நிலவும் அமைதியை என்றென்றும் நிலைபெறச் செய்ய நாம் அனைவரும் உறுதி கொள்ள வேண்டும்!
Tuesday, September 21, 2010
இடிந்து விழுந்தது மேம்பாலம் அல்ல... இந்திய மானம்....
“இதனை இவனால் முடியும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”
-இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் இந்த நாட்டில் என்ன நடக்கும் என்பதை துல்லியமாக கணித்து எழுதியல்தானே, வான்புகழ் வள்ளுவர் தெய்வப்புலவன் என்று போற்றப்படுகிறார்.
எழுபதாயிரம் கோடி ரூபாயை வாணவேடிக்கை விட்டு நடத்தப்படும் காமன்வெல்த் போட்டி அமைப்புக் குழுவினருக்கு என்ன மாதிரியான தகுதி இருக்க வேண்டும் என்று நிர்ணயித்து இருக்க வேண்டாமா? “சுகாதாரக்குறை என்பதெல்லாம் ஒவ்வொருவர் பார்வையிலும் வித்தியாசப்படும்” என்று உளறிக்கொட்டும் செய்தி தொடர்பாளர், நடை மேம்பாலம் இடிந்து விழுந்து நான்கு பேர் உயிருக்கு போராடும் நிலையில், “இது சாதாரண மக்களுக்காக கட்டப்பட்ட நடை மேம்பாலம்தான்” என்று அரக்கத்தனமாக பேசும் டெல்லி முதல்வர், “புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் ஒன்றிரண்டு மின்சார வயர்கள் அப்படி இப்படி கிடப்பதும், கழிவறை சரியாக இல்லாததும், வளாகத்தில் நாய் தொல்லைகள் இருப்பதும் சர்வ சாதாரண விஷயம்தான்” என்று அலட்சியத்தின் உச்சக்கட்டமாக பேசும் அதிகாரி...
இவர்களுக்கெல்லாம் இந்தப் போட்டியை நடத்தும் அளவுக்கு தகுதி இருக்கிறதா என்று முடிவு செய்தது யார்? என்ன அடிப்படையில் அந்த முடிவு எடுக்கப்பட்டது? அரசு அலுவலகங்களில் பியூன் வேலைக்கு ஆள் எடுப்பதற்கே எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்று எத்தனை தேர்வுகள் வைக்கிறார்கள்? அப்படி இருக்கும்போது எழுபதாயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை கையாளப் போகும் நபர்கள் தகுதி எந்த அளவிற்கு இருக்க வேண்டும்?
முதலில் ஒரு விஷயத்தை நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சினை பற்றி ஊடகங்களில் செய்திகள் வெளிவரும்போது எல்லாம், “இது நாட்டின் கவுரவப் பிரச்சினை; எனவே, பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தாமல் போட்டிகள் நல்லவிதமாக நடக்க உதவ வேண்டும்” என்று விளையாட்டு அமைச்சர் எம்.எஸ். கில்லும், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தும், காமன்வெல்த் போட்டி அமைப்பு தலைவர் சுரேஷ் கல்மாடியும் மீண்டும் மீண்டும் கோரஸாக வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
எதோ இந்த விளையாட்டு நடத்தவது என்பது இந்த மூன்று பேருடைய தனிப்பட்ட சாதனை என்பது போன்றே இவர்கள் காட்டிக் கொண்டனர். இது இந்திய தேசத்தால் நடத்தப்படும் போட்டி. இதற்காக எழுபது ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இந்திய நாடு நடத்தும் போட்டி என்ற வகையில், நியாயமாக பிரதமர்தானே இந்தப் போட்டிகளின் நன்மை மற்றும் தீமைகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்? அவரது சார்பில், விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ். கில் தானே முதல் ஆளாக நின்றிருக்க வேண்டும்? விழாக்களில் மட்டும் முதன்மையாக நிற்பதற்கா இந்தப் பதவிகள்?
எதோ ஒரு மூன்றாம் நபர் போலவே பிரதமரும் அவரது அமைச்சரவை சகாக்களும் நடந்து கொள்கின்றனரே, இவர்கள் சற்றே வரலாற்றை திரும்பிப் பார்ப்பார்களா? 1982-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளை இதே டெல்லியில் நடத்திய பொது, இரண்டு வருடமே அவகாசம் இருந்த நிலையிலும், அன்றைக்கு இருந்து ஏகப்பட்ட தொழில்நுட்ப வசதிக் குறைவுகளையும் மீறி, மிகச் சிறப்பாக நடத்தி முடித்தார், இந்திரா காந்தி. அவருக்கு உறுதுணையாக இருந்து போட்டிகளை மிகச் சிறப்பாக நடத்தி முடித்து உலக அரங்கில் இந்தியாவின் கொடியை உயரப் பறக்க வைத்தார், ராஜீவ்காந்தி.
2003-ம் ஆண்டு போட்டி நடத்துவதற்கான அனுமதியைப் பெற்றுவிட்டு, ஏழு வருட அவகாசத்துக்குப் பின்னரும், எல்லாவித தொழில்நுட்ப வசதிகள் இருக்கும்போதும், பட்ஜெட் என்று ஒன்று இல்லாமல் பணத்தை தண்ணீராக செலவழித்தும், இவ்வளவு கேவலமான நிலைமையில் இந்தியாவின் மானத்தை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்களே, கொஞ்சமாவது தார்மீக பொறுப்பு இருந்திருந்தால் இவர்கள் ராஜினாமா செய்து இருக்க வேண்டாமா?
காமன்வெல்த் போட்டி என்ற பெயரில், கோடி கோடியாக கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை இரண்டு மாதங்களுக்கு முன்பே எல்லா ஊடகங்களும் தெள்ளத்தெளிவான ஆதாரங்களுடன் தோலுரித்துக் காட்டினார்களே, அப்போதாவது பிரதமர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? எத்தனையோ திறமையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ள இந்த நாட்டில் கல்மாடியை நீக்கினால் என்ன நடந்து விடும்? பிரதமருக்கு எதற்கு தயக்கம்? அவரை செயல்பட விடாமல் தடுத்தது எந்த சக்தி?
இரண்டு மாதங்களுக்கு முன்னரே பிரதமர் கட்சியை சேர்ந்த மணிசங்கர் அய்யர், “காமன்வெல்த் போட்டிகள் என்ற பெயரில் மன்னிக்க முடியாத தவறுகள் நடக்கின்றன; உலக அரங்கில் நமக்கு பெரும் கெட்டப்பெயரை இது வாங்கித் தந்துவிடும். எனவே, போட்டி நடக்கும்போது நாட்டிலேயே நான் இருக்க மாட்டேன்” என்று கொதித்துப் போய் சொன்னாரே, அந்தக் கருத்துக்காவது செவி மடுத்திருக்கலாமே...?
எல்லா விதத்திலும் நம்மோடு போட்டி போடும் சீனா, எவ்வளவு அருமையாக- உலகமே வியந்து பாராட்டும் வகையில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்திக் காட்டினார்களே, அவர்கள் இப்போது நம்மைப் பார்த்து கைகொட்டி சிரிக்க மாட்டார்களா?
அரசியல் அசுத்தம் எதுவும் கலக்காத நேர்மையான மனிதர் என்று மக்களால் நம்பப்பட்ட மன்மோகன்சிங், எப்படியாவது பதவியில் ஒட்டிக்கொண்டு இருந்தால் போதும் என்று நினைக்கும் மூன்றாம்தர அரசியல்வாதியாக மாறிவிட்டதைப் பார்க்கும்போது, மிகவும் வருத்தமாக உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழலும், காமன்வெல்த் ஊழலும்- கையாலாகாத்தனமும் அவரை ஏழேழு ஜென்மத்துக்கும் துரத்துமே...! அதைப்பற்றியாவது அவர் கவலைப்படுவாரா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. நமக்கு அந்தக் கவலை நிச்சயம் இருக்கிறது.
“இந்தியாவுக்கு விடுதலை கொடுக்க ஏன் மறுக்கிறீர்கள்” என்று அப்போதைய இங்கிலாந்து பிரதமர் சர்ச்சிலிடம் கேட்டபோது, அவர் என்ன பதில் கூறினாராம் தெரியுமா? “அந்த முட்டாள்களுக்கு ஆட்சி நடத்தவெல்லாம் தெரியாது; அவர்களிடம் எப்படி இவ்வளவு அருமையான நாட்டை ஒப்படைப்பது?” என்று கேட்டாராம்...
இங்கிலாந்து பிரதமருக்கு அன்றே தெரிந்த உண்மை இந்திய ஏமாளிகளுக்குத் தெரிந்திருந்தால், மன்மோகன்களும், கல்மாடிகளும், எம்.எஸ்.கில்களும் அட்டை போல பதவிகளில் ஒட்டிக்கொண்டு இருக்க முடியுமா? “நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்து விட்டால்...”