வணக்கம்! போலி சாமியார்- போலி மருந்துகள்- திருமணத்துக்கு முன்பே உறவு என கடந்த சில வார செய்திகளில் ஆக்கிரமித்து இருந்த விஷயங்கள் எதுவுமே ஆரோக்கியமானதாக இல்லை என்றாலும், மத்திய அரசின் “புதிய கல்வி கொள்கை” நம்பிக்கை ரேகையை பரவ விட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட “கல்வி கற்பது அடிப்படை உரிமை” திட்டம் ஏறக்குறைய 130 நாடுகளில்- நம்மை விட பல வகையில் பின்தங்கிய நாடுகளில் கூட- செயல்படுத்தப்பட்டு வருகிறது. நமது நாட்டிலும், “கல்வி அடிப்படை உரிமை” என சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவச கல்வி சட்டமாக்கபட்டுள்ளது.
எந்த காலக்கட்டத்திலும், மனித சமூகத்தின் ஆதாரமாக திகழ்வது கல்வி அறிவுதான். இதை முழுமையாக உணர்ந்திருந்த “படிக்காத மேதை” காமராஜர், எல்லா குழந்தைகளுக்கும் கல்விக்கண் திறப்பதையே தன் வாழ்வின் மிகப்பெரிய லட்சியமாகக் கொண்டிருந்தார். ஆரம்பக்கல்வி படிக்கும் குழந்தைகளால் எவ்வளவு தொலைவு நடக்க முடியுமோ, அதை கருத்தில் கொண்டு ஆரம்பப்பள்ளிகளையும், உயர்நிலைப் பள்ளி மாணவர்களால் பயணிக்க இயலும் தூரத்தை கணக்கில் கொண்டு உயர்நிலைப் பள்ளிகளையும் துவக்க உத்தரவிட்டவர், கர்ம வீரர்! அது மட்டுமல்ல, வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் குழந்தைகளுக்கு மத்திய உணவு அளிப்பதன் மூலம், அவர்களை பள்ளிக்கு வரவழைத்த தீர்க்கதரிசி அவர்!
படிப்பறிவு இல்லாத அந்த மேதைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய சிந்தனை இப்போதாவது நமக்கு வயப்பட்டதே! ஆனாலும், 50 ஆண்டுகளுக்கு முன்பு நமது அரசாங்கமும் அதிகாரிகளும் கொண்டிருந்த நேர்மையும் செயல்திறனும், எந்த ஒரு திட்டத்தையும் சிறப்பாக செயல்படுத்த அடிப்படை காரணமாக அமைந்திருந்தது. இன்று அதை எதிர்பார்க்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான்!
இந்தியாவில் ஆறு முதல் பதினான்கு வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 22 கோடி என்றும், அதில் சுமார் 92 லட்சம் பேர் அடிப்படை கல்வியறிவு அற்றவர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இவர்கள் பள்ளிக்கு செல்லாததன் மிகப் பெரிய காரணமே, வறுமை தான்! இளம் வயதிலேயே ஹோட்டல்கள், மெக்கானிக் கடைகள் போன்றவற்றில் வேலை செய்து, தங்களால் இயன்ற அளவுக்கு, குடும்ப வறுமையை போக்குவதில் பங்காற்றுகிறார்கள். இளமையில் வறுமை மிகப் பெரிய கொடுமை என்பதும், நமது நாட்டில் சுமார் 30 சதவீதம் பேர் அதை அனுபவிப்பவர்கள் என்பதும் நாம் அறிந்ததே!
இவர்களின் கல்வியும்- குடும்பத்தின் ஏழ்மை சூழ்நிலையும் ஒன்றோடு ஒன்று பிண்ணி பிணைந்தவை. இதை ஒட்டுமொத்த சமூக பிரச்சினையாக அணுகினால் மட்டுமே, இந்தத் திட்டத்தின் உயரிய நோக்கம் நிறைவேறும் பாதையில் நம்மால் பயணிக்க முடியும். முதல் அடி எடுத்து வைப்பதன் மூலமே எந்த நீண்ட பயணத்தையும் தொடங்க முடியும் என்ற வகையில், அடிப்படை கல்வி உரிமை சட்டத்தை வரவேற்று, நம்மால் இயன்ற பங்களிப்பை செய்வோம்!
No comments:
Post a Comment