சமீபத்தில் பெண் எழுத்தாளர் ஒருவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது... "இணையதளத்தில் வெளியாகும் அவரது எழுத்துக்களில் ஆபாசம் மேலோங்கி இருக்கிறது" என்பதுதான் அந்த புகார்...!
வழக்கம் போலவே எழுத்தாளருக்கு ஆதரவான- எதிர்ப்பான கருத்துக்கள் பல்வேறு தரப்பிலும் கிளம்பி விட்டன. "எழுத்துக்கும் பேச்சுக்கும் தடை போட இது ஒன்றும் பழமைவாதிகளால் ஆளப்படும் நாடு அல்ல" என்று ஒரு சாராரும், "சுய ஆதாயத்துக்காக ஆபாசமாக எழுதப்படுவது கண்டிக்கப்பட வேண்டும்" என்று மறு சாராரும் வாதிடுகின்றனர்.
எந்த ஒரு கருத்துக்கும் இரு வகை பார்வை இருக்கத்தான் செய்யும். அவரவர் பார்வையில் அவரவர் கருத்துக்கள் நியாயமானவையே! என் மனத்திலும் இது குறித்து எழுந்த தர்க்கங்களை உங்கள் முன் சமர்ப்பிகின்றேன்...!
எந்த ஒரு நாகரீகமான சமுதாயத்திலும் குறிப்பிட்ட சில மனிதர்களுக்கு விசேஷமான மரியாதைகளும், அவர்களது கருத்துக்களுக்கு முன்னுரிமையும் கிடைப்பது இயல்புதான்! அரசியல்வாதிகளுக்கு அவர்களது அதிகாரத்தின் மூலமாகவும், நடிகர்களுக்கு கவர்ச்சியினாலும், ஆன்மிகவாதிகளுக்கு- அவர்களது ஞானத்தின் காரணமாகவும், பெரிய மனிதர்களுக்கு பணத்தினாலும் இந்த முக்கியத்துவங்கள் கிடைக்கின்றன.
இவர்களை தவிர, சமுதாயத்தினால் எப்போதுமே ஊன்றி கவனிக்கப்படுபவர்கள் இலக்கியவாதிகள்! இவர்களது படிப்பறிவும்- வித்தியாசமான சிந்தனைகளும், மொழியின் மீதான காதலும் இவர்களுக்கு எப்போதுமே ஒரு சிறப்பான இடத்தை சமூகத்தில் பெற்று தருவதுடன், இவர்களது சிந்தனைகளும் கருத்துக்களும் சமுதாயத்தில் பெரிய தாக்கத்தை உண்டாக்கக் கூடியவை என்பதை யாரும் மறுக்க முடியாது! இதனாலேயே பொறுப்புணர்வும் இவர்களுக்கு சற்று கூடுதலாக இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்ப்பது தவறா?
"சினிமாவில் காட்டாத ஆபாசத்தையா நாங்கள் எழுதி விட்டோம்?" என்று ஒரு தவறை இன்னொரு தவறுக்கு உதாரணப்படுத்துவது என்பது முரணாகத் தெரியவில்லையா? "ஆபாசத்தின் எல்லை எது என்பதை எப்படி வரையறுக்கிறீர்கள்?" என்று புத்திசாலிதனமாக கேட்பதன் மூலம், தங்களது பொறுப்பில் இருந்து நைசாக நழுவும் முயற்சிதானே இது!
குறிப்பிட்ட சில கருத்துக்களை வலியுறுத்த பயன்படும் முயற்சியில் உபயோகிக்கப்படும் வார்த்தைகள் நிச்சயமாக தவறாக எடுத்துக் கொள்ளப்படாது தான்! கமலின் மகாநதியில் உபயோகிக்கப்படும் "விலைமகள் மகன்" வார்த்தையும் இந்த வகையானது தான்! இந்த அளவுகோலை எல்லா இடங்களிலும் பயன்படுத்த முடியுமா? ஏன், இவர்களது வீட்டில் பயன்படுத்துவார்களா?
"100 ஆசை நாயகர்களை வைத்துக் கொள்வேன்" என்பதும், "இருபாலுமை என்பது எனது பிறப்புரிமை" என வறட்டு வாதம் புரிவதும், சமூகம் உருப்பட எந்த வகையில் உதவும் என்பதும் நமது சிற்றறிவுக்கு புரியவில்லை. இவர்களின் ஆபாச எழுத்துக்கு எதிர்ப்பு கிளம்பும்போது எல்லாம் "பெண்ணிய படைப்பாளிகளை முடக்கும் முயற்சி" என்ற உளுத்துப் போன வாதத்தின் அடியில் ஒளிந்து கொள்ள முயல்வது ஏன்?
அடிமனது வக்கிரங்களும், காம உணர்ச்சியும் மனித குலத்தின் பலவீனம்தான்! அதை மட்டரகமான முறையில் பயன்படுத்தி பொருள் லாபம் ஈட்ட முனைவோர் மிருகத்திற்கு சமமானவர்கள் அன்றோ! இலக்கியவாதிகள் என்பவர்கள்- சமுதாயத்தின் பலவீனங்களை களைந்து, மென்மேலும் முன்னேற ராஜபாட்டை அமைக்க வேண்டியவர்கள் அல்லவா?
எப்பேர்பட்ட வேதனைகளையும்- வலிகளையும், காதலையும்- காமத்தையும், வீரத்தையும்- விவேகத்தையும் அழகாக சொல்ல அன்னை தமிழில் வார்த்தைகள் இல்லையா? இல்லை, இவர்களது வார்த்தை வளம்தான் குன்றி விட்டதா? எழுத்து சுதந்திரம் என்பது என்ன? எதை வேண்டுமானாலும் எழுதுவதா? அல்லது முற்போக்கு சிந்தனைகளை- யாருக்கும் அஞ்சாமல் வலிமையான வார்த்தைகள் மூலம் விதைப்பதா?
எதையுமே தவறில்லை என்று வாதிட்டு- மற்றவர்களை மட்டுமின்றி, தங்களை தாங்களே ஏமாற்றி கொள்பவர்களாகத்தான் இவர்கள் தென்படுகிறார்களே தவிர, உண்மையான இலக்கியவாதிகளாக அல்ல!
இப்படி வருடத்திற்கு ஒருமுறை ஏதாவது ஒரு சர்ச்சையில், இவர்கள் வலுவில் சென்று சிக்கிக் கொள்வதன் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? மலிவான விளம்பர உத்திகளை நம்பி மட்டுமே பொருளையும் புகழையும் அடைந்து விடலாம் என்ற தவறான எண்ணத்தை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
No comments:
Post a Comment