ஏறத்தாழ 2400 ஆண்டுகளுக்கு முன்னர், தன்னுடைய மகனோடு அரண்மனையின் மிக உயர்ந்த பகுதியில் நின்று கொண்டு, கண்களில் அளப்பறியா ஆர்வம் கொப்பளிக்க பேசிக்கொண்டு இருந்தார். “மகனே, அதோ கிழக்கே வெகு தொலைவில் எனது கனவு தேசமான இந்தியா உள்ளது! வற்றாத ஜீவநதிகளும், கற்பனையிலும் எண்ணமுடியாத இயற்கை வளங்களும், வைர- வைடூரிய- ரத்தின குவியல்களும் குவிந்துள்ள நாடு அது! எல்லாவற்றிற்கும் மேலாக, ஹோமரின் அற்புத படைப்புகளான லியத், ஒடிஸ்ஸி ஆகியவற்றை விஞ்சும் வகையில் ராமாயணம், மகாபாரதம் போன்ற எண்ணற்ற காவியங்களும், தத்துவக் குவியல்களும் நிறைந்துள்ள நாடு இந்தியா. அந்த நாட்டை வென்று உனது ஆட்சியின் கீழ் கொண்டு வருவதைத்தான் உன் வாழ்க்கையின் லட்சியமாகக் கொள்ளவேண்டும்” என உணர்ச்சி பொங்க உரைத்த அந்த மன்னன் பிலிப்; ஆர்வத்துடனும் உன்னிப்பாகவும் கவனித்துக் கொண்டிருந்த மகன்தான் உலகையே தனது கோடிக்கு கீழே கொண்டு வரத் துடித்த மாவீரன் அலெக்சாண்டர்!
2400 ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவின் அளவற்ற வளங்கள் உலகத்தின் கண்களை வெகுவாக உறுத்தியது என்றால், பணத்தின் மீது வெறி கொண்டு அலையும் நவீன காலத்து மனிதர்களைப் பற்றி சொல்லவேத் தேவையில்லை.
கர்நாடகத்தின் வடக்குப் பகுதியில்- ஆந்திர எல்லையில் இந்தியாவின் கனிம வளத்திற்கு சான்றாக விளங்குவதுதான் பெல்லாரி மற்றும் சுற்றுப்பகுதிகள். தங்கள் காலடிக்கு கீழே குவிந்து கிடக்கும் செல்வம் பற்றி அறியாது, வறுமையில் உழன்று கொண்டிருந்தனர், அந்தப் பகுதி மக்கள். விடுவார்களா அரசியல்வாதிகள்?
தற்போது கர்நாடக அரசியலையே தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் அந்த மந்திரி சகோதரர்கள், சுரங்கம் தோண்டும் உரிமையைப் பெற்று, இயற்கை வளம் முழுவதையும் எந்தவித கட்டுப்பாடும் இன்றி சூறையாடிக் கொண்டிருக்கின்றனர். தடுக்க வேண்டிய அரசாங்கத்தின் அனைத்துப் பிரிவினரின் கைகளையும் கரன்சி கத்தைகளால் கட்டிப்போட்டுள்ளனர், சகோதரர்கள்!
அவர்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் குறைந்தபட்சம் 100 கோடி டன் இரும்புத்தாது இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு டன் இரும்புத்தாது ஏற்றுமதி செய்தால் கிடைக்கும் வருமானம் 7,000 ரூபாய். அதை வெட்டி எடுக்க ஆகும் செலவு வெறும் 350 ரூபாய். ஆக, ஒரு டன்னுக்கு மட்டும் கிடைக்கும் லாபம் சுமார் 6600 ரூபாய்.
இதில் அரசாங்கத்துக்கு கொடுக்கப்படும் தொகை எவ்வளவு தெரியுமா? மயங்கி விடாதீர்கள்... வெறும் 27 ரூபாய்! இதுவரை சுரண்டி எடுக்கப்பட்டது மட்டும் 30 கோடி டன் இரும்புத்தாது! அப்படியானால், அந்த சகோதரர்கள் இதுவரை சூறையாடிய இயற்கை வளங்களின் மதிப்பை கணக்குப் போட்டு பார்க்க கால்குலேட்டரில் இருக்கும் பூஜ்யங்கள் போதாது!
அரசாங்க விதிகளை மீறுவது- காடுகளை சகட்டுமேனிக்கு அழிப்பது மட்டுமல்லாமல், இரு மாநில எல்லைகளையே தங்கள் இஷ்டத்திற்கு இவர்கள் மாற்றி அமைத்துள்ளதும் தெரியவந்துள்ளது! இவ்வளவுக்கும் இரண்டு மாநிலங்களை ஆள்வதும் எதிரெதிர் தேசியக் கட்சிகள்!
பணம் என்றால் பிணம் கூட வாயைத் திறக்கும் என்பார்கள்! இந்த அரசியல்வாதிகள் எம்மாத்திரம்? மாவீரன் அலெக்ஸாண்டரின் தந்தையாவது இந்தியாவின் வளத்தை தங்களது நாட்டு மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்றுதான் எண்ணினான்... ஆனால் நம்மவர்களோ, இவ்வளவு பணத்தைக் கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்று கூடத் தெரியாமல், பணவெறிக்கு இரையாகிக் கிடக்கிறார்களே?
மாவோயிஸ்ட்களின் பிரச்சினைக்கு மூல காரணமாக சொல்லப்படுவதே, பழங்குடியினர் பகுதிகளில் இயற்கை வளங்கள் கொள்ளை அடிக்கப்படுவதுதான்! அதிலும், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நக்சலைட்டுகள் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் நமது நாட்டில் இன்னமும் இதுபோன்ற இயற்கைவளக் கொள்ளையை அனுமதிக்கலாமா?
கவனிக்குமா, மத்திய அரசு?
No comments:
Post a Comment