விதுர நீதி!

புராண காலம் தொடங்கி, இன்றைய நவீன காலம் வரை எவ்வளவோ அமைச்சர்கள் தங்கள் மதிநுட்பத்தை பல்வேறு விதமாக, பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால், திருதராஷ்டிரன் அமைச்சரவையை அலங்கரித்த விதுரன் போன்ற மதிநுட்பமும், நேர்மையும், யாருக்கும் அஞ்சாமல் நல்லவற்றை எடுத்துரைத்தல் போன்றவற்றில் விதுரனுக்கு இணையாக சொல்லக்கூடியவர்கள் வெகு சிலரே! காலத்தை வென்று நிற்கும் விதுரநீதி, இன்றைய அரசியல்வாதிகளுக்கு மிகவும் பொருந்தக்கூடியது! விதுரநீதியில் லட்சத்தில் ஒரு பங்கு நமக்கு கைகூடினாலும் அது நாம் செய்யும் பாக்கியமே!


Friday, May 28, 2010

அழகிப் போட்டி எனும் கேலிக்கூத்து!

1994-ம் ஆண்டு உலக அழகிப் போட்டிகளில் சுஷ்மிதா சென்னும் ஐஸ்வர்யா ராயும் வெற்றிக்கொடி நாட்டிய பிறகு, அழகிப்போட்டிகள் பெரும்பாலான இந்திய இளம்பெண்களின் கனவு, இல்லை- இல்லை, லட்சியமாகவே ஆகிவிட்டன. மிஸ் யுனிவர்ஸ் முதல் மிஸ் உசிலம்பட்டி வரை அழகிப்போட்டிகள் நடக்காத இடங்களே இல்லை எனலாம்.

இந்தியாவிலேயே இந்த நிலை என்றால் அமெரிக்காவைப் பற்றி கேட்கவே வேண்டாம். அங்கேயே பிறந்து வளர்ந்த பெண்களாகட்டும், அல்லது பிற நாடுகளில் இருந்து குடியேறியவர்களாகட்டும், மிஸ் அமெரிக்கா பட்டம் சூடுவது அவர்களின் மிகப்பெரிய கனவு!

இந்த ஆண்டு அமெரிக்க அழகிப்போட்டியில் வெற்றி பெற்ற ரீமாவுக்கு ஒரு தனிச்சிறப்பு உள்ளது. ஆம், அமெரிக்க அழகிப்போட்டியில் வென்ற முதல் இஸ்லாமிய பெண் என்பதுதான் அது! லெபனான் நாட்டைச்சேர்ந்த ரீமா, மூன்று வயதிலேயே அமெரிக்காவுக்கு குடியேறி விட்டார்.

பொது இடங்களில் பெண்கள் ஆடை குறைப்பு செய்து, தங்கள் உடல் அழகை வெளிச்சம் போட்டுக் காட்டுவது இஸ்லாமிய கோட்பாடுகளின்படி தவறு- தடையும் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், தங்களது பெற்றோர்கள் அளித்த ஆதரவினாலும், ஊக்கத்தினாலும்தான் தன்னால் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற முடிந்தது என்கிறார், ரீமா!

லெபனான் பழமைவாதிகள் மத்தியில் ரீமா அழகிப்போட்டியில் கலந்து கொண்டதே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் இப்போது அடுத்த பிரச்சினை வெடித்துள்ளது.

2007-ம் ஆண்டு டெட்ராய்ட் நகரில், நிர்வாண நடனங்களுக்கு புகழ்பெற்ற ஒரு இரவு விடுதியில் “போல் டான்ஸ்” எனப்படும் அரை நிர்வாண ஆட்டம் போட்டதாக ரீமா மீது இப்போது குற்றச்சாட்டு வீசப்பட்டுள்ளது. உலக அழகிப்போட்டி விதிகளின்படி இது தவறு என்பதால், விசாரணை நடத்தப்படுகிறது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ரீமாவின் பட்டம் பறிக்கப்படும்.

அமெரிக்காவில் இது ஒன்றும் புதிதல்ல. கடந்த ஆண்டு வெற்றி பெற்ற பெண்ணும், செக்ஸ் வீடியோவில் தோன்றிய குற்றச்சாட்டினால் அழகிப் பட்டத்தை இழக்க நேரிட்டது.

ஆனால், பெண்ணுரிமை ஆர்வலர்கள் கருத்தோ வேறுவிதமாக உள்ளது. ஆணுக்குப் பெண் சரிநிகராக கருதப்படும் இந்தக்காலத்தில், பெண்களின் உடல் அழகை வெளிச்சமிட்டுக் காண்பிக்கும் இத்தகையப் போட்டிகள், அவர்களை வெறும் சதைப்பிண்டமாகவும் கவர்ச்சிப் பாவைகளாகவும் பார்க்கும் வக்கிர உணர்வைத்தான் காட்டுகிறதே ஒழிய, அழகுணர்ச்சி என்பதெல்லாம் போலி மேற்பூச்சு வாதம் என்று கடுமையாக சாடுகிறார்கள்.

அரைகுறை ஆடையுடன் நைட் கிளப்பில் ஆடியதை குற்றமாக பார்க்கும் போட்டி அமைப்பாளர்கள் செய்வது என்ன? போட்டியில் கலந்து கொள்ளும் அத்தனை பெண்களையும் டூ-பீஸ் நீச்சல் உடைகளுடன் ஒய்யார நடை போட வைத்து, அதை தொலைகாட்சிகள் மூலம் உலகம் முழுக்க காண்பித்து, மில்லியன் மில்லியனாக டாலர்களை குவிப்பதை என்னவென்று சொல்வது? அரை நிர்வாண ஆட்டம் தவறு என்றால் இது எந்தவகையில் சாரும்?

உலக அழகிப்போட்டி இறுதிச்சுற்றில் ஒரு கேள்வி கேட்கப்படும். இது அழகிகளின் அறிவை சோதிப்பதற்காகவாம்! ஒரே கேள்வியிலேயே எதிரில் இருப்பவர்களின் அறிவை தெரிந்து கொள்ள இவர்கள் என்ன அந்த படைப்பு கடவுள் பிரம்மாவா?

அதற்கு முன்பு வரை அந்தப் பெண்களின் அங்கங்களையும் அசைவுகளையும் முழுமையாக வெளிச்சம் போட்டு காட்டுவதற்காக, அனைத்து தகிடுதத்தங்களையும் செய்துவிட்டு, ஒரே ஒரு கேள்வி கேட்டு விட்டு, நாங்கள் அறிவையும் சோதிக்கிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வது கடைந்தெடுத்த பித்தலாட்டமே அன்றி வேறு என்ன?

மற்றவர்களை வெறும் ஆண்களாகவும் பெண்களாகவும் மட்டுமே பார்த்து, Ladies and Gentlemen என்றே அழைத்துக் கொண்டிருந்த இதே அமரிக்க தேசத்தில், சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஞானஒளியை பரப்பச் சென்ற விவேகானந்தர், தனது புகழ்பெற்ற சிகாகோ உரையின்போது, Brothers and Sisters என்று பேச்சைத் துவக்கியத்தின் மூலம், மிகப்பெரிய உண்மையை அந்த தேசத்தை உணரச் செய்தார். ஆம்! பெண்ணை சகோதரியாகவும் பார்க்கலாம் என்ற உணர்வை ஒரே சொல்லின் மூலம் உணர்த்திய உணர்வுபூர்வமான உரை அது!

“மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என முழக்கமிட்ட முண்டாசுக்கவிஞன் இன்று உயிரோடிருந்து, “இழிவுகளுக்கு இணங்கிப் போகும் இளம் பெண்களைக்” காண நேர்ந்திருந்தால் என்னவாகி இருப்பானோ?

No comments:

Post a Comment