நமது ஆட்சி முறை, அரசியல் அமைப்பு சட்டம், நீதித்துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் பெரும்பாலும் இங்கிலாந்து நாட்டின் தழுவலாகவே உள்ளது நாம் அறிந்ததே! நூறு ஆண்டுகளுக்கு மேலாக அவர்களிடம் நாம் அடிமைப்பட்டிருந்ததன் விளைவு இது!
கடந்த அறுபது ஆண்டு காலத்தில் பாராளுமன்ற- சட்டமன்ற ஆட்சி முறைகளில் எண்ணற்ற மாற்றங்கள் வந்து விட்டது. அதில் குறிப்பிடத்தக்கது, பல்வேறு கட்சிகள் சேர்ந்து அமைக்கும் கூட்டணி ஆட்சி முறை! அடிப்படை கொள்கையிலேயே முரண்படும் கட்சிகள் கூட, அதிகாரம் ஒன்றை மட்டுமே பொது குறிக்கோளாகக் கொண்டு அமையும் இத்தகைய சந்தர்ப்பவாத கூட்டணி ஆட்சி முறையில், முதலில் பலி கொடுக்கப்படுவது நேர்மையும், தார்மீக சித்தாந்தங்களும்தான்! மத்தியிலும், பல்வேறு மாநிலங்களிலும் இதுதான் இன்றைய நிதர்சனம்!
மத்தியில் கூட்டணி ஆட்சி முறை வழக்கத்துக்கு வந்த பின்னர், மாநில கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகின்ற நிர்ப்பந்தத்தின் காரணமாக- அந்தந்த மாநிலத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் நிலையினை, கூட்டணி ஆட்சியை ஆதரிப்பவர்கள் சுட்டிக்காட்டுவது உண்டு! ஆனாலும், மாநில கட்சிகளின் ஆதிக்கம் மையத்தில் வலுப்பெறும் பட்சத்தில் ஊழல் அதிகரித்து இருப்பதுதான் யதார்த்தத்தில் நாம் அனுபவிக்கும் உண்மை!
சமீபத்தில், பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக வெட்டுத் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, ஆளும்கட்சியினர் தங்களுக்கான ஆதரவை பெரும் முயற்சியில், சில மாநிலக்கட்சித் தலைவர்களின் ஊழல் விவகாரங்கள் பெருமளவில் சமரசம் செய்து கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. ஜனநாயக ஆட்சி முறையின் மோசமான விளைவு இது என்பதை அறிவார்ந்த பெருமக்கள் அனைவரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
கூட்டணி ஆட்சி முறை இவ்வாறாக மிகவும் அபாயகரமான பாதையில் பயணித்துக் கொண்டிருந்தாலும், இதற்கான தீர்வு குறித்து யாருக்குமே ஒரு தெளிவில்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய உண்மை.
சரி, ஆரம்பத்தில் ஏன் இங்கிலாந்து பற்றி குறிப்பிட்டோம் எனத் தோன்றுகிறதா? நமது ஜனநாயகம் பயணிக்கும் அதே மோசமான பாதையில், இங்கிலாந்தும் பயணிக்க ஆரம்பித்து விட்டதின் அறிகுறி தெரிய ஆரம்பித்து விட்டது. ஆம்! மும்முனை போட்டி நிலவிய இங்கிலாந்து தேர்தலில், ஆளும் கட்சி தோல்வியைத் தழுவிய போதும், எந்த கட்சிக்கும் தனிப்பெரும் ஆதரவு கிட்டவில்லை. இதைத் தொடர்ந்து, 13 ஆண்டுகளாக எதிர் வரிசையில் அமர்ந்திருந்த பழமைவாதிகள் கட்சி, சுதந்திர ஜனநாயக கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்து உள்ளது.
இங்கிலாந்து வரலாற்றிலேயே கூட்டணி ஆட்சி ஏற்படுவது இதுதான் முதல் முறை! இது சாதனையா அல்லது வேதனையா? என்பது போக போகத்தான் தெரியும். நமது நாட்டில் உள்ளது போலவே, இந்த கட்சிகளுக்கு இடையேயும் அடிப்படையிலேயே கொள்கை வித்தியாசம் பெருமளவில் உள்ளது. இங்குள்ள அரசியல் பேரங்களைப் போலவே, அங்கும் அரங்கேறியது. கூட்டணி கட்சித் தலைவருக்கு துணை பிரதமர் பதவி வழங்கப்பட்டு, ஆட்சி அமைக்கப்பட்டது.
நல்லவற்றை யார் சொன்னாலும், எங்கு கண்டாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது அறிவுடையோர் வாக்கு. ஆனால், அதிகாரத்தைக்’ கைப்பற்றும் வழிமுறை எப்படிப்பட்டதாக இருந்தாலும், எந்த நாடு கடைப்பிடித்து வந்தாலும், அதை அப்படியேத் தழுவி, பதவியில் அமர்ந்து விடுவதுதான் அரசியல்வாதிகளின் குறிக்கோள் என்பது இங்கிலாந்தில் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
கூட்டணி ஆட்சி என்பது ஐரோப்பாவுக்கு புதிதில்லை என்றாலும், உயர்ந்தபட்ச அரசியல் நெறிமுறைகளைப் பின்பற்றும் வழக்கம் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இன்றைக்கும் நிலவுகின்றது. இந்நிலையில், பதவிக்கான பேரங்களுடன் இங்கிலாந்து ஜனநாயகம் துவங்கி இருக்கும் இந்த புதிய பாதை, ஐரோப்பிய அரசியல் ஆர்வலர்களிடம் சற்று கவலையை விதைத்து இருப்பதை மறுக்க முடியாது!
இங்கிலாந்து ஜனநாயகத்தையாவது இறைவன் காப்பாற்றுவானாக!
No comments:
Post a Comment