விதுர நீதி!

புராண காலம் தொடங்கி, இன்றைய நவீன காலம் வரை எவ்வளவோ அமைச்சர்கள் தங்கள் மதிநுட்பத்தை பல்வேறு விதமாக, பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால், திருதராஷ்டிரன் அமைச்சரவையை அலங்கரித்த விதுரன் போன்ற மதிநுட்பமும், நேர்மையும், யாருக்கும் அஞ்சாமல் நல்லவற்றை எடுத்துரைத்தல் போன்றவற்றில் விதுரனுக்கு இணையாக சொல்லக்கூடியவர்கள் வெகு சிலரே! காலத்தை வென்று நிற்கும் விதுரநீதி, இன்றைய அரசியல்வாதிகளுக்கு மிகவும் பொருந்தக்கூடியது! விதுரநீதியில் லட்சத்தில் ஒரு பங்கு நமக்கு கைகூடினாலும் அது நாம் செய்யும் பாக்கியமே!


Monday, October 4, 2010

அமைதி விரும்பிகள்!

ஆதிகாலத்தில் “மதம்” பிடித்து திரிந்த மனிதனை முறைப்படுத்த வந்ததுதான் மதம்! உலகின் எந்த மதமாக இருந்தாலும், அடிப்படையான சில கோட்பாடுகள் ஒன்றாகவே இருப்பதை நாம் காணலாம். இந்து மதம், யூத மதம், அதில் இருந்து உருவான கிருத்தவ மதம், இஸ்லாமிய மதம், புத்த மதம் ஆகிய மதங்கள்தான் உலகம் முழுவதும் பிரதானமாக பின்பற்றப்படுகிறது. நமது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் எந்த மதமும் வன்முறையை ஆதரித்தது இல்லை.

ஆனால், மதத்தைப் பரப்பும் அல்லது காப்பாற்றும் முயற்சியில் நடைபெற்ற சிலுவைப் போர்கள், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக் மற்றும் மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளில் இன்றைக்கும் நடைபெறும் வன்முறைகள், அமைதி ஒன்றையே அடிப்படையாகக் கொண்ட புத்த மதம் பின்பற்றப்படும் கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, வியட்நாம், மியான்மர் மற்றும் பல நாடுகளில் நடைபெற்ற வன்முறைகள் என உலகம் முழுக்க மதத்தின் பெயரால், வன்முறைகளும் கொலைகளும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

நமது நாட்டிலும் மதத்தின் பெயரால் எண்ணற்ற வன்முறை சம்பவங்கள் நடந்து, அதன்மூலம் கணக்கற்ற மக்களின் உயிரையும் உடைமையும் இழந்திருக்கிறோம். ஆனால், நீண்ட காலத்திற்குப் பிறகு, இந்திய மக்களின் அமைதியை விரும்பும் குணமும், சகிப்புத்தன்மையும் அற்புதமாக வெளிப்பட்டதைக் காண முடிந்தது.

நவீன இந்தியாவில் மிக முக்கியமான நாட்கள் பட்டியலில் செப்டம்பர் 29-ந் தேதிக்கு குறிப்பிட்ட இடம் நிச்சயமாக உண்டு. அறுபது ஆண்டுகளுக்கு மேலாக சட்டப்படியான தீர்வை எதிர்பார்த்துக் கொண்டிருந்த இரண்டு சமுதாய மக்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இந்தியாவும் ஒருவித பதட்டத்தோடும் படபடப்போடும் காத்துக் கொண்டிருந்த நாள்! இந்திய மக்கள் அமைதி விரும்பிகள் என்பதை உலகுக்கு மீண்டும் ஒருமுறை அழுத்தம்திருத்தமாக நிரூபித்த நாள்!

ஆம்... தீர்ப்பு எப்படி இருக்குமோ, எந்த நேரம் வன்முறை வெடிக்குமோ என்று நாடு முழுக்க ஒருவித பயம் நிலவியதால், மத்திய- மாநில அரசுகளால் லட்சக்கணக்கில் பாதுகாப்பு படைவீரர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர். ஆனால், உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல், சட்டத்தின் முடிவை இருதரப்பினரும் அமைதியாகவும், ஆரவாரம் ஏதுமின்றியும் ஏற்றுக்கொண்ட விதம், ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற முன்மாதிரியை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது.

நாடு சுதந்திரம் பெற்றபோது நடைபெற்ற மதக்கலவரங்களால் மிகவும் நொந்து போன மகாத்மா காந்தியடிகள், கிட்டத்தட்ட நடைபிணமாகவே மாறிவிட்டார். அரும்பாடு பட்டு பெற்ற சுதந்திரத்தை ஒரே வருடத்தில் இப்படி பாழடிக்கிறார்களே என்ற வேதனை அவரை நிலைகுலையச் செய்து விட்டது. அவரது பிறந்தநாளை கொண்டாடும் இத்தருணத்தில் இந்திய மக்கள் நடந்து கொண்டவிதம், முதல் முறையாக அவரது ஆன்மாவை சாந்தி அடைய செய்து இருக்கும்.

எந்த ஒரு மனிதனுக்கும் நிம்மதியான- அமைதியான- சந்தோஷமான வாழ்க்கை தான் குறிக்கோளாக இருக்க முடியும். எந்த ஒரு மதமும், மத குருவும் அதற்கான வழியைத்தான் காட்ட வேண்டும். அதை விடுத்து, ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்பி விட்டு, அதன்மூலம் எரியத் தொடங்கும் நெருப்பில் குளிர் காய்பவர்களையும் மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இப்போது நிலவும் அமைதியை என்றென்றும் நிலைபெறச் செய்ய நாம் அனைவரும் உறுதி கொள்ள வேண்டும்!

1 comment:

  1. ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்பி விட்டு, அதன்மூலம் எரியத் தொடங்கும் நெருப்பில் குளிர் காய்பவர்களையும் மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இப்போது நிலவும் அமைதியை என்றென்றும் நிலைபெறச் செய்ய நாம் அனைவரும் உறுதி கொள்ள வேண்டும்

    ---------------

    அதே

    ReplyDelete